மேலூர் அருகே பஸ் கவிழ்ந்து கண்டக்டர் பலி: 13 பேர் படுகாயம்
மதுரை: மதுரை மேலூர் அருகே அரசு விரைவுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் கண்டக்டர் சம்பவ இடத்திலேயே பலியானார். பேருந்தில் பயணம் செய்தவர்களில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
மதுரை மேலூர் அருகே உள்ள நான்கு வழிச்சாலையில் அரசு விரைவுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சியை நோக்கிச் சென்ற அரசு விரைவுப் பேருந்து (டி.என் 01 7327) மேலூர் தும்பைபட்டி அருகில் செல்லும் போது ஏர்லாக் ஆகி ஸ்டியரிங்க் செயல்படாமல் போனது.
இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, தலை குப்புற கவிழ்ந்து ரோட்டின் மறுபுறத்தில் உள்ள மின்கம்பத்தில் மோதியது.
இந்த விபத்தில் திருச்சியை சேர்ந்த கண்டக்டர் வேணுகோபால் (45) சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் நீதி (47), பயணிகள் விமலா, ரமேஷ், அப்துல், இசக்கிமுத்து, நடேசன் உள்பட 13 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications