ரிஷிவந்தியம் தொகுதியில் குறைகேட்பில் குழப்பம்-கலெக்டர் கோபம்-மக்கள் ஆத்திரம்
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் தொகுதியான ரிஷிவந்தியத்தில் மக்கள் குறை கேட்பு முகாமின்போது பொதுமக்கள் அவசரப்பட்டு ஆத்திரப்பட்டதால், கலெக்டரும் ஆவேசப்பட்டு கிளம்பிப் போய் விட்டார்.
ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட கோல்பாறை என்ற இடத்தில் ஆட்சித் தலைவர் பழனிச்சாமி தலைமையில் மனு நீதி நாள் முகாம் நடந்தது. கலெக்டர் நேரில் வந்து புகார் மனுக்களைப் பெற்றுக் கொண்டிருந்தார்.
அப்போது வருவாய்த்துறை அலுவலர் ஒருவர் கலெக்டரை அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றார். இதையடுத்து கலெக்டரும் உள்ளே போனார். இந்த சமயத்தில் புகார் கொடுக்க வந்திருந்த மக்கள் கூட்டத்தில் நின்றிருந்த ஒருவர் கலெக்டர் வாங்கி வைத்திருந்த மனுக்களை கிழித்து எறிந்தார்.
மனுக்களை வாங்காமல் கலெக்டர் உள்ளே போய் விட்டாரே என்று பொதுமக்களும் ஆத்திரமடைந்தனர். சிறிது நேரத்தில் கலெக்டர் வெளியே வந்தார். அப்போது மனுக்கள் கிழிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து கோபமாகிய அவர், உங்கள் குறைகளைத் தீர்க்கத்தானே மனுக்களை வாங்கினேன். அதைப் போய் கிழித்துப் போட்டிருக்கிறீர்களே என்று கோபத்துடன் கூறி விட்டு அங்கிருந்து கிளம்பிப் போய் விட்டார்.
அவருடன் தாசில்தார் உள்ளிட்டவர்களும் கிளம்பிச் செல்லவே மக்கள் மேலும் கோபமடைந்து மிச்சம் மீதம் இருந்த மனுக்களையும் கீழே போட்டு தீவைத்துக் கொளுத்தி விட்டுக் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications