எம்.ஜி.ஆரின் அரசியல் சக்தி ரஜினியிடம் இருக்கிறது-வைகோ

மதிமுகவின் 18ம் ஆண்டு விழா சென்னை சைதாப்பேட்டையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு வைகோ பேசினார். அதிமுக ஆட்சி குறித்தும், ஜெயலலிதா குறித்தும், ராஜபக்சே குறித்தும், இலங்கைப் பிரச்சினை குறித்தும் பேசிய வைகோ, ரஜினி குறித்தும் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
நடிகர் ரஜினி சிகிக்சைக்காக சிங்கப்பூர் சென்றிருக்கிறார். அவர் சிங்கப்பூர் செல்லும் முன்பு பேசிய ஆடியோவை அவரது மகள் வெளியிட்டிருந்தார். அந்த ஆடியோவை நான் கேட்டேன்.
அந்த ஆடியோவில், நான் பணம் வாங்கிக்கொண்டு நடிக்கிறேன். அதற்கே தன் மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள் என்று ரஜினி கூறுகிறார். இப்படி கூறுவதற்கு பெருந்தன்மை வேண்டும்.
நடிகர் ரஜினி விரைவில் பூரண நலம் பெறுவார். எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இருக்கிற அரசியல் சக்தி ரஜினியிடம் இருந்தது. இப்போதும் இருக்கிறது
கூட்டணி சேர்ந்ததால் மதிப்பிழந்தேன்
நாங்கள் திமுக அதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறோம். அவ்வாறு சேர்ந்ததால் நான் மதிப்பிழந்திருக்கிறேன். மரியாதை இழந்திருக்கிறேன். பரிகாசத்துக்கு ஆளாகியிருக்கிறேன்.
அவ்வாறு கூட்டணி சேர்ந்ததை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. எனினும் நாம் அழித்து ஒழிக்கப்படக்கூடிய நிலை வரும்போது தற்காலிகமாக, சமரசம் செய்துக்கொள்வதில் தவறில்லை என பகத்சிங் கூறியிருக்கிறார்.
எங்களுக்கும் அத்தகைய சூழ்நிலை வந்தபோதுதான் தற்காலிகமாக சமரசம் செய்துகொள்ள கூட்டணி வைத்தோம். முன்பு அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தபோது நாங்கள் பணத்துக்காக சேர்ந்தோம் என வீண்பழி சுமத்தப்பட்டோம். ஆனால் கடந்த தேர்தலில் பங்கேற்கப்போவதில்லை என்ற எங்கள் முடிவின் மூலம் அந்தப் பழி துடைக்கப்பட்டிருக்கிறது.
மதிமுக வலிமை பெறுவது தமிழகத்திற்கு நல்லது
மதிமுக வளர்வதும் வலிமை பெறுவதும் தமிழகத்துக்கும் தமிழகத்தின் எதிர்காலத்திற்கும் நல்லது. எனவே தமிழக மக்கள் எங்களை ஆதரிக்க வேண்டும். மதிமுக மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுக்கும். தமிழகத்தின் அரசியல் அதிகாரம் ஒரு நாள் எங்களுக்கும் வரும்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் பெரும் மௌனப் புரட்சி செய்து ஜனநாயகத்துக்கு மகுடம் சூட்டியிருக்கிறார்கள். தற்போது பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசு நல்லது செய்தால் ஆதரிப்போம். தவறு செய்தால் கண்டிக்க தயங்க மாட்டோம்.
ராஜபக்சேவைக் கண்டித்து தீர்மானம் போடுக
இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த அந்நாட்டின் அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். அவர் செய்த போர்க்குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற குரல் உலகெங்கும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் விரைவில் கூடவுள்ள தமிழக சட்டப்பேரவையில் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications