அமைச்சரவை அமைக்க முடியாமல் திண்டாடி வரும் புதுச்சேரி ரங்கசாமி
புதுச்சேரி: தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களில் அமைச்சரவை அமைக்கப்பட்டு அங்கு மாநில அரசுகள் சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்து விட்ட நிலையில் புதுச்சேரியில் மட்டும் இன்னும் அமைச்சரவையே இல்லாமல், முதல்வர் ரங்கசாமி தனித்து செயல்பட்டு வருகிறார்.
புதுச்சேரியில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து என்.ஆர். காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது. இந்தக் கூட்டணிக்கு மொத்தம் உள்ள 30 இடங்களில் 20 இடங்கள் கிடைத்தன. இதில் என்.ஆர். காங்கிரஸுக்கு மட்டும் 15 இடங்கள் கிடைத்தன.
சேர்ந்து போட்டியிட்டு வென்ற ரங்கசாமி, வெற்றிக்குப் பிறகு தனித்து ஆட்சி அமைப்போம் என்று கூறி விட்டார். இதனால் ஜெயலலிதா கடும் கோபமடைந்து, மிகப் பெரிய துரோகத்தை ரங்கசாமி செய்துள்ளார் என்று கடுமையாக சாடினார். புதுச்சேரி அதிமுகவும் ரங்கசாமியை கடுமையாக கண்டித்தது.
இந்த நிலையில் இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்ட ரங்கசாமி இன்னும் அமைச்சரவையை அமைக்க முடியாமல் திண்டாடி வருகிறார். அமைச்சரவை அமைச்சர்கள் யாரும் இல்லாததால், புதுவை அரசு நிர்வாகம் பெரும் குழப்பமடைந்துள்ளது.
எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. கோப்புகள் கையெழுத்திடப்படாமல் தேங்கிக் கொண்டிருக்கின்றன. விரைவில் அமைச்சரவை பதவியேற்கும் என்று ரங்கசாமி தொடர்ந்து கூறி வருகிறார். இருப்பினும் இதுவரை அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கான அறிகுறியையே காணோம்.
அதிமுகவின் கோபத்திற்கு ஆளாகி விட்டதால் அமைச்சரவை அமைப்பதில் ரங்கசாமிக்கு பெரும் குழப்பமாகியுள்ளது. மேலும், அவரது கட்சி எம்.எல்.ஏக்கள் பலரும் அமைச்சர் பதவி கேட்கின்றனர், முக்கியத் துறைகளையும் கேட்கின்றனர். மேலும் ரங்கசாமிக்கு ஆதரவாக வந்துள்ள திமுகவைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ. சிவக்குமாரும் அமைச்சர் பதவி கேட்கிறார்.
அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் அதிமுக தனது ஆதரவை வாபஸ் வாங்கி விடும் என்பதால், மெல்லிய மெஜாரிட்டியை வைத்துக் கொண்டு ஐந்து ஆண்டு காலத்தை கடப்பது சிரமம் என்பதால் மிகுந்த நிதானம் காட்டுகிறார் ரங்கசாமி.
அதிமுகவுக்கு 2 அமைச்சர் பதவி தருவதாக அவர் சமாதானக் கொடி காட்டியுள்ளார். ஆனால் இதுவரை அதற்கு எந்தப் பலனும் இல்லை. ஜெயலலிதா இதுவரை ரங்கசாமிக்குப் பதிலளிக்கவில்லை.
அதேசமயம், மீண்டும் காங்கிரஸுடன் கை கோர்க்கும் திட்டத்தில் ரங்கசாமி இல்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே காங்கிரஸில் இருந்தபோது அக்கட்சியினரிடம் சிக்கி படாதபாடு பட்டவர் ரங்கசாமி. அந்த அனுபவத்தை அவர் மறந்திருக்க மாட்டார். மேலும் எதற்கெடுத்தாலும் மேலிடத்தைப் பார்ப்பதற்காக டெல்லிக்கு காவடி தூக்க வேண்டிய நிலையிலும் அவர் இருந்தார்.
ஆனால் இப்போது அப்படி இல்லை. நானே ராஜா, நானே மந்திரி என்ற நிலையில் அவர் இருக்கிறார். அமைச்சரவை அமைப்பதற்கான சிக்கலை தவிர்த்து விட்டால் புதுச்சேரியில் அரசு நிர்வாகம் சீரடையும் என்பதால் விரைவில் ரங்கசாமி அமைச்சர்களை நியமிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.












Click it and Unblock the Notifications