மக்களை திசை திருப்பும் வகையில் பேசுகிறார் கருணாநிதி-செ.கு. தமிழரசன் தாக்கு
குடியாத்தம்: முதல்வர் ஜெயலலிதா எடுத்து வரும் நல்ல நடவடிக்கைகளிலிருந்து மக்களை திசை திருப்பும் வகையில் பேசி வருகிறார் திமுக தலைவர் கருணாநிதி என்று இந்திய குடியரசுக் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏவுமான செ.கு. தமிழரசன்.
இதுதொடர்பாக குடியாத்தத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இனி சுரண்டுவதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் திமுக அரசு தமிழகத்தை பாலைவனமாக மாற்றி விட்டுச் சென்றது. தமிழகத்தின் கடன்தொகை ரூ. 1 லட்சம் கோடி. இதற்கு நாள் ஒன்றுக்கு வட்டி ரூ.30 கோடி.
இந்த நிலையில் தமிழக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட ஜெயலலிதா, மிகத் துணிவோடு மக்களுக்குத் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பதவியேற்ற அன்றே மக்கள் நலத் திட்டங்களாக, மாதம் 20 கிலோ இலவச அரிசி, முதியோர் உதவித் தொகை ரூ. 1,000, ஏழைப் பெண்களின் தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட 7 அரசாணைகளை பிறப்பித்தார்.
தொடர் நடவடிக்கையாக தினம், தினம் அமைச்சரவையை கூட்டி பல மணி நேரம் ஆலோசனைகள் நடத்தி, தமிழகத்தை வளப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இந்த நல்ல தொடக்கத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அதை திசை திருப்பும் நடவடிக்கைகளை கருணாநிதி மேற்கொண்டுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியின்போது ராணி மேரி கல்லூரி வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முதல்வர் ஜெயலலிதா முயற்சி மேற்கொண்டார். அதற்கு கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்தார். அதையடுத்து, கோட்டூர்புரத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடிவெடுத்த ஜெயலலிதா, அதற்காக நிலம் தேர்வு செய்து, நிதியையும் ஒதுக்கி, அங்கு அடிக்கல்லையும் நாட்டினார்.
ஆட்சிமாற்றம் ஏற்பட்டு தமிழக முதல்வராக பதவியேற்ற கருணாநிதி கோட்டூர்புரத்தில் கட்டப்பட்ட கட்டடத்தை நூலகமாக மாற்றினார். இந்த செயல்கள் கருணாநிதியின் அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டுகின்றன.
கடந்த திமுக ஆட்சியில் ரூ. 400 கோடியில் புதிதாக தலைமைச் செயலகம் கட்டுவதாக அறிவித்த கருணாநிதி, ரூ. 1200 கோடி வரை அதற்கு செலவானதாக தெரிவித்தார். பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் ஒரு ஆண்டுக்கு முன்பே அதன் திறப்பு விழாவை நடத்தி, அங்கு தலைமைச் செயலகத்தை மாற்றினார். ஏற்கெனவே இருந்த தலைமைச் செயலகத்தை முடக்கி விட்டார். எதற்காக இந்த நடவடிக்கைகளை கருணாநிதி மேற்கொண்டார்?
இந்நிலையில் மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்ட ஜெயலலிதா, கட்டுமானப் பணிகள் நிறைவு பெறாத புதிய தலைமைச் செயலகத்தை தவிர்த்துவிட்டு, பழைய தலைமைச் செயலகத்தையே புதுப்பித்து, அதில் தலைமைச் செயலகத்தை இயக்கத் தொடங்கினார்.
ஆனால் கருணாநிதியோ நான் கட்டியதால்தான், புதிய தலைமைச் செயலகத்தை ஜெயலலிதா தவிர்க்கிறார் என தவறான அறிக்கைகள் விடுகிறார். முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசின் நல்ல தொடக்கத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதி, மக்கள் மத்தியில் விஷ விதையை தூவுகிறார் என்று குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications