செல்போனில் பேசிக் கொண்டே தண்டவாளத்தை கடக்க முயன்ற இருவர் பலி
மதுரை: சமயநல்லூர் அருகே செல்போனில் பேசிக் கொண்டே ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இருவர் மீது ரயில் மோதியது. இதில் அவர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
மதுரையை அடுத்த சமயநல்லூரில் உள்ள சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் கருப்பு மகன் கார்த்தி (30). இவர் அருகில் உள்ள தண்டாவளத்தில் ரயில் வருவதை கவனிக்காமல் செல்போனில் பேசிக் கொண்டே சென்றதால் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதேபோன்று அதே பகுதியைச் சேர்ந்த கவியரசு (30) என்பவரும் ரயில் வருவது தெரியாமல் செல்போனில் பேசிக் கொண்ட தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரயில் கவியரசு மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேய துடிதுடித்து இறந்தார்.
கால, நேரம் தெரியாத செல்போன் பேச்சு இரண்டு அப்பாவி உயிர்களை காவு வாங்கியுள்ளது.
காதொலி கருவியை தொலைத்தவர் ரயிலில் அடிபட்டு சாவு
நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும்போது காதொலி கருவியை தொலைத்தவர் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் கோவையில் ஒரு கம்ப்யூட்டர் மையத்தினை நிர்வகித்து வந்தார். இவருக்கு செவித்திறன் குறைபாடு இருந்ததால், காது கேட்கும் கருவியை பொருத்தி இருப்பார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நண்பர்களுடன் ஆவாரம்பாளையத்தில் உள்ள ஒரு மைதானத்தில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தார். அப்போது அவர் காதில் இருந்த கருவி தொலைந்து விட்டது.
கிரிக்கெட் விளையாடி விட்டு, ரயில் தண்டவாளத்தை ஒட்டிய பகுதியில் உள்ள தன் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். தண்டவாளப் பாதையில் அவர் சென்றபோது பின்னால் வந்துகொண்டிருந்த திருச்சி-பாலக்காடு ரயிலை அவர் கவனிக்கவில்லை.
வெங்கடேஷுக்குப் பின்னால் ரயில் வருவதைக் கண்ட அவரது நண்பர்கள் கூச்சல் போட்டனர். ஆனால், காதொலி கருவி இல்லாததால் வெங்கடேஷுக்கு காது கேட்கவில்லை. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ரயில் வெங்கடேஷ் மீது மோதியது. சம்பவ இடத்திலேயே அவர் உடல் சிதறி பலியானார். ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications