மு.க. அழகிரி ஆதரவு மாஜி எம்எல்ஏ மூர்த்தி மீது நில ஆக்கிரப்பு புகார்
மதுரை: மதுரை அருகே சிறுதூரில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தியின் தூண்டுதலால் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அதை மீட்டுத்தர வேண்டும் என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயத்திடம் பலர் மனு அளித்துள்ளனர்.
மதுரை பசுபதி நகர் பட்டிமேட்டைச் சேர்ந்தவர் கே. பெரியசாமி. இவரது தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயத்திடம் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது,
மதுரை வடக்கு தாலுகா சிறுதூரில், ரீசர்வே (169/1, 169/2) நிலத்தை முல்லை நகர் அய்யனாருக்கு சின்ன சொக்கிகுளம் இ.எம்.ஜி.சவுந்திரராஜன் கிரையம் மூலம் விற்பனை செய்தார்.
அய்யனார், நிலத்தை வீட்டடி மனைகளாக பிரித்து எங்களிடம் சட்டப்படி விற்பனை செய்துள்ளார். இதற்கு தாசில்தார் பட்டா வழங்கியுள்ளார். அவற்றில் நாங்கள் முற்கம்பி வேலி அமைத்து பராமரித்து வந்தோம்.
இந்த நிலையில் சவுந்தரராஜன் மகன் அருள்போத்தி என்பவர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி தூண்டுதலின் பேரில் அந்த நிலம் தங்களுடையது என்று கூறி, அடியாட்களை வைத்து மிரட்டி வருகின்றார்.
மேலும், அந்த நிலத்தின் எல்லை கற்கள் மற்றும் முள்வேலியை அகற்றியுள்ளார். அந்த நிலத்திற்கு 2010-ம் ஆண்டு வரை நாங்கள் வரி செலுத்தியுள்ளோம். தற்போது வி.ஏ.ஓ. வரி வாங்க மறுக்கிறார்.
எனவே, எங்களுடைய நிலத்தை எங்களுக்கு மீட்டுக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications