பாக். கடற்படை வீரர்-அல் கொய்தா தொடர்பை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் படுகொலை-ஐஎஸ்ஐ கைவரிசை?

பாகிஸ்தானின் கடற்படைத் தளத்தில் சமீபத்தில் தீவிரவாதிகள் பெரும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் கடற்படையின் முன்னாள் கமாண்டர் ஒருவருக்குத் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த நிலையில் ஹாங்காங்கைச் சேர்ந்த ஆசியா டைம்ஸ் செய்தி இணையதளத்தின் பாகிஸ்தான் பிரிவு தலைவராக பணியாற்றி வந்த பத்திரிக்கையாளர் சையத் சலீம் ஷெஹ்ஷாத் (40) பாகிஸ்தான் கடற்படைக்கும், அல் கொய்தாவுக்கும் உள்ள நெருங்கிய தொடர்புகள் குறித்து செய்தி வெளியிட்டார். மேலும், பாகிஸ்தான் கடற்படைக்குள் அல் கொய்தா தீவிரவாதிகள் ஊடுறுவியிருப்பது குறித்தும் அவர் செய்தி வெளியிட்டார்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் அவர் இஸ்லாமாபாத்திலிருந்து காணாமல் போனார். அவரை ஏற்கனவே பலமுறை ஐஎஸ்ஐ அதிகாரிகள் இதுபோல செய்தி வெளியிடக் கூடாது என்று மிரட்டியதாக செய்திகள் வெளியாகியிருந்ததால் அவரை ஐஎஸ்ஐதான் கடத்திப் போயிருப்பதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் ஷெஹ்ஷாத் படுகொலை செய்யப்பட்டிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. அவரது உடல், ஷெஹ்ஷாத்தின் காருக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சித்திரவதை செய்து அவரைக் கொன்றுள்ளனர்.
பஞ்சாப் மாகாணம், மந்தி பெஹதின் என்ற இடத்தில் கால்வாய் ஒன்றில் ஷெஹ்ஷாத்தின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலில் ஏராளமான காயங்கள் உள்ளன.
அல் கொய்தா தீவிரவாதிகளுக்கும், ஐஎஸ்ஐக்கும் உள்ள தொடர்புகள் குறித்து பலமுறை செய்திகள் வெளியிட்டவர் ஷெஹ்ஷாத்.இதனால் அவர் மீது ஐஎஸ்ஐ அதிகாரிகள் கடும் காட்டத்துடன் இருந்து வந்தனர். இந்த நிலையில்தான் ஷெஹ்ஷாத் கொல்லப்பட்டுள்ளார்.
ஷெஹ்ஷாத்துக்கு மனைவி, 14 மற்றும் 7 வயதில் இருமகன்கள், 12 வயதில் ஒரு மகள் உள்ளனர்.
முன்னதாக ஷெஹ்ஷாத் எழுதிய ஒரு கட்டுரையில், பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்ட சில கடற்படை அதிகாரிகளை மீட்க அல் கொய்தா தீவிரமாக முயன்றது. கைது செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு அல் கொய்தாவுடன் தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில்தான் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து பாகிஸ்தான் கடற்படையுடன் அல் கொய்தாவினர் பேச்சு நடத்தியுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது. இதனால் ஆவேசமடைந்த அல் கொய்தாவினர், பாகிஸ்தான் கடற்படைத் தளமான பிஎன்எஸ் மேஹரானைத் தாக்கி அழிப்போம் என்று பாகிஸ்தான் கடற்படைக்குச் சவால் விட்டனர். சொன்னபடியே இந்த தாக்குதலை நடத்தினர் என்று ஷெஹ்ஷாத் எழுதியிருந்தார். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அல்கொய்தா அமைப்பின் தலைவர்களில் ஒருவரான இலியாஸ் காஷ்மீரியின் 313 பிரிகேட் என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அமெரிக்கா கண்டனம்:
ஷெஹ்ஷாத்தின் கடத்தல், டார்ச்சர், கொலைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கண்டனம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications