தமிழகம் மராட்டியத்தை பின்பற்ற வேண்டும்-ராமதாஸ் !
சென்னை: தமிழகத்தில் மதுக் கடைகளை படிப்படியாக மூடி, முழுமையான மதுவிலக்கைக் கொண்டு வர வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், மது இல்லாத மாநிலத்தை எப்படி உருவாக்குவது என்று மகாராஷ்டிர மாநிலம் வழிகாட்டியிருக்கிறது. மகாராஷ்டிராவில் இனி 25 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்றும், ஏதேனும் ஒரு ஊரில் 25 சதவீத மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அங்குள்ள மதுக்கடைகள் மூடப்படும் என்றும் அந்த மாநில அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
தமிழகத்திலோ நீதிமன்றம் உத்தரவிட்டபிறகும் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்படுவதில்லை. மகாராஷ்டிராவில் 25 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் 13 வயது பள்ளி மாணவர்கள் கூட மது குடிப்பதாக செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாமக பல ஆண்டுகளாக போராடி வருகிறது. தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றதுமே முழு மதுவிலக்கை கொண்டுவரும்படி நான் போராடி இருந்தேன்.
முதல்படியாக மகாராஷ்டிராவில் உள்ளதுபோல பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதிகளில் மதுக்கடைகளை உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 25 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட வேண்டும். நாள்தோறும் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே மதுக்கடைகள் திறந்திருக்க வேண்டும்.
பின்னர் இதையும் படிப்படியாகக் குறைத்து குறிப்பிட்ட காலத்துக்குள் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையால் மதுக்கடை ஊழியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களை படிப்படியாக அரசு ஊழியர்களாக்கி மற்ற துறைகளில் பணியமர்த்த வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications