சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும்-இந்திய கம்யூ
சென்னை: சமச்சீர் கல்வித் திட்டத்தில் உள்ள குறைகளை நீக்கி அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஆறுமுகம் கூறுகையில்,
நகராட்சி, பேரூராட்சி முன்னேற்றத்துக்கு சிறப்பு திட்டங்கள் போன்றவற்றை வரவேற்கிறோம். சமச்சீர் கல்வியின் குறைபாடுகளை நீக்கி நடைமுறைப்படுத்த வேண்டும். ராஜபக்சேவை சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். புதிதாக வீடு கட்டும் திட்டத்துக்கு 3 சென்ட் இடம் ஒதுக்கி தொகையையும் ரூ.3 லட்சமாக அறிவிக்க வேண்டும் என்றார்.
இன்னும் அதிகம் எதிர்பார்த்தோம்-சிபிஎம்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் செளந்தரராஜன் கூறுகையில், ஆளுநர் உரையில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதனை நாங்கள் வரவேற்கிறோம். தொழில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்த இன்னும் அதிகம் எதிர்பார்த்தோம். ஜவுளி தொழில், சாயப்பட்டறை பிரச்சினை குறித்து கவர்னர் உரையில் அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்த்தோம்.
பொது விநியோக திட்டத்தில் 500 கார்டுக்கு ஒரு ரேஷன் கடை வர வேண்டும் என்றும் எதிர்பார்த்தோம். சமச்சீர் கல்வியின் குறைபாடுகளை நீக்கி இப்போது முழுமையாக அமல்படுத்த வேண்டும். புதிய தலைமைச் செயலக முறைகேடு குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டாலும் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். கட்டிடத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications