ராம்தேவ் கைது செய்யப்பட்ட நாள் நாட்டின் வரலாற்றில் கருப்பு தினம்-நரேந்திர மோடி

இதுகுறித்து அகமதபாத்தில் உள்ள தனது தொகுதியான மணிநகரில் நடந்த கூட்டத்தில் மோடி பேசுகையில்,
பாபா ராம்தேவை கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்திய செயலுக்கு மன்மோகன் சிங் அரசுதான் முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். ஊழலுக்கு எதிராக போராடியதற்காக டெல்லி காவல்துறையினர் இதைச் செய்துள்ளனர். டெல்லி காவல்துறை டெல்லி மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. எனவே மன்மோகன் சிங் அரசுதான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
நாட்டின் வரலாற்றில் இது ஒரு கருப்பு தினம் ஊழலுக்கு எதிராகவும், கருப்புப் பணத்திற்கு எதிராகவும் நாட்டு இளைஞர்கள் தீவிரமாக போராட முன்வர வேண்டும்.
ராம் தேவ் கேட்டதெல்லாம் என்ன, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கபப்ட்டுள்ள கருப்புப் பணத்தை எத்தனை நாட்களுக்குள் இந்தியாவுக்குள் கொண்டு வருவீர்கள் என்பதுதான். ஆனால் அப்படிக் கேட்டவரை முடக்க அவர்கள் மேற்கொண்டது அடக்குமுறை, வன்முறை.
அவர்களை ஆதரிக்கும் பலரும் இன்று சிறைக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குக் கவலை இல்லை. திமுக தலைவர்கள் அடுத்தடுத்து சிறைக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். ஆனால் காங்கிரஸாருக்குக் கவலை இல்லை. ஆனால் இதே காங்கிரஸார் சிறைக்குப் போகும் நேரும் வரும். அப்போதுதான் அவர்களுக்குப் பிரச்சினை புரியும்.
பாபா ராம்தேவ் கைது விவகாரம் குறித்து நாட்டு மக்களுக்குத் தவறான செய்திகளைக் கொடுக்க காங்கிரஸ் முயன்றது. ஆனால் அதிர்ஷ்டவசமாக டிவி மீடியாவின் உபயத்தால் நாம் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. இல்லாவிட்டால் ராம்தேவையே குற்றவாளியாக்கி கதை புணைந்திருப்பார்கள் காங்கிரஸார்.
அவர்களுக்குப் பொய் சொல்வது புதிதில்லை. மாலையில் ராம்தேவின் கோரிக்கைகளை ஏற்பதாக கூறுகிறார் மத்திய அமைச்சர். ஆனால் நள்ளிரவில் அதிரடியாக கைது செயகின்றனர். அந்த இரவுக்குள் அப்படி என்ன நடந்து விட்டது.? ராம்தேவுக்கு எதிராக முரட்டுத்தனமாக நடக்க வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்து களம் இறங்கியுள்ளனர்.
இந்த நாட்டின் இளைஞர்கள் இதுபோன்ற வன்முறை, அடக்குமுறையைப் பொறுத்துக் கொள்ளக் கூடாது. ஊழலுக்கு எதிராக மக்கள் போராட வேண்டியது அவசியம். நாம் ஊழலுக்கு எதிராக குரல் எழுப்பாவிட்டால், நல்லவர்களும் கெட்டுப் போகும் நிலை ஏற்பட்டு விடும்.
நான் அதிகாரத்தி்ல இருந்தாலும் கூட ஊழலை எதிர்த்துப் போராட நானும் கூட முன்வர வேண்டும். டெல்லி போராட்டத்தை ஒடுக்க என்னவெல்லாம் நாடகமாடியுள்ளனர். எப்படிப்பட்ட அசிங்கமான வழிகளை அவர்கள் கடைப்பிடித்துள்ளனர். என்ன மாதிரியான போலி புகார்களை எல்லாம் சுமத்தினார்கள். டெல்லியில் தர்பார் புரிந்து கொண்டிருக்கும் அரசு என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறது.
எதையும் செய்வதில்லை இவர்கள். மாறாக எல்லோருக்கும் சிறை வாயிலை திறந்து விட்டுக் கொண்டிருக்கின்றனர். சிறையை விட பெரிய இடம் அவர்களிடம் உள்ளதா, நாட்டு மக்கள் அத்தனை பேரையும் அடைத்து வைப்பதற்கு?
மக்களை அச்சுறுத்துவதை இந்த அரசு நிறுத்த வேண்டும். கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு, தடியடி, பெண்கள், குழந்தைகள், சகோதரிகளுக்கு எதிரான இந்த அடக்குமுறை அராஜகத்திற்காக, 120 கோடி இந்தியர்களுக்கும் காங்கிரஸ் பதிலளித்தாக வேண்டும்.
இந்த விவகாரத்தில் தலையிடாமல் மெளனம் காக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். அவரை நம்ப இந்த நாடு தயாராக இல்லை. உங்களது ஆட்சியில்தான் இந்த அடக்குமுறை, அராஜகங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பிரதமர் மன்மோகன் சிங்கின் நேரடி நிர்வாகத்தில்தான் டெல்லி காவல்துறை உள்ளது. ஷீலா தீட்சித் வசம் காவல் துறை இல்லை. டெல்லி ஆட்சியை ஆட்டிப்படைத்து வருவோரின் தூண்டுதலில்தான் இந்த அடக்குமுறை நிகழ்த்தப்பட்டுள்ளது.
எப்போதெல்லாம் நாடு நெருக்கடியில் மூழ்குகிறதோ, நெருக்கடியான நிலை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் உங்களது அப்பாவி முகத்தை காட்டித் தப்பித்துக் கொள்கிறீர்கள். பிரச்சினை குறித்து உங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. இதுபோன்ற வித்தைளை நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள். பிரதமர் பதவியில் நீங்கள் இருந்தால், உங்களது பலத்தைக் காட்டுங்கள். உங்களுக்கு இந்த அடக்குமுறை, அராஜகத்தில் தொடர்பில்லை என்றால் அதை நிரூபியுங்கள்.
சகோதரர்களே, சகோதரிகளே, உங்களது குரல்கள் தொடர்ந்து ஒலிக்க வேண்டும். நிறுத்தி விடக் கூடாது. போராட்டம் தொடர வேண்டும். நாங்கள் ராம்தேவுக்கு ஆதரவாக இருக்கிறோம். ஊழலை எதிர்க்கும் காங்கிரஸார் ராம்தேவுக்கு ஆதரவாக திரும்ப வேண்டும். அதில் எந்தத் தவறும் இல்லை.
ஊழலை எதிர்ப்பவர்களாக இருந்தால் ஏன் ஊழலுக்கு எதிராக போராடுபவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கக் கூடாது.
இது ஒரு கட்சிக்கு எதிரான போராட்டம் அல்ல, ஒரு அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல. இது அழுகிப் போன நமது ஜனநாயக முறையை மீட்டு, நாட்டைக் காக்க நடத்தப்படும் போராட்டமாகும்.
இந்த கருப்புத் தினத்தை நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள், மறக்க மாட்டார்கள் என்றார் மோடி.












Click it and Unblock the Notifications