கேரளா மீது நிரந்தர பொருளாதார முற்றுகை: வைகோ எச்சரிக்கை
சென்னை: முல்லைப் பெரியாற்றில் கேரளா புதிய அணை கட்ட முயன்றால் அந்த மாநிலத்தின் மீது தமிழகம் நிரந்தர பொருளாதார முற்றுகையை அமல்படுத்தும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாற்றில் புதிய அணையைக் கட்டியே தீருவோம் என்று கேரளத்தின் புதிய முதல்வர் உம்மண் சாண்டி கடந்த நாள்களுக்குள் இரண்டு முறை கூறியிருக்கிறார். இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. இதனால் ஐந்து மாவட்டங்கள் அடியோடு பாசன வசதியையும், குடிநீர் வசதியையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கேரள அரசின் அக்கிரமமான போக்கைத் தடுக்க வேண்டிய கடமையை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செய்யவே இல்லை.
கேரள அரசு, முல்லைப் பெரியாறு அணையில் கை வைக்கவோ, புதிய அணை கட்டவோ முனைந்தால், நிரந்தரப் பொருளாதார முற்றுகையைத் தமிழகம் ஏற்படுத்தும் என எச்சரிக்க விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில் இருந்து அரிசி, பருப்பு, காய்கறிகள், பால், கால்நடைகள் மற்றும் கட்டுமானத்திற்குத் தேவையான மணல் எல்லாம் கேரளத்துக்குச் செல்கிறது. தமிழ்நாடு இதைத் தராவிட்டால், கேரளம் தாங்க முடியாத அவலத்துக்கு உள்ளாகும்.
தமிழக முதல்வர் நம் மாநிலத்தின் முக்கிய வாழ்வாதாரப் பிரச்சனையான இந்தப் பிரச்சனையில், கேரள அரசின் தவறான போக்கைத் தடுத்து நிறுத்தவும், மத்திய அரசுக்கு நிலைமையின் விபரீதத்தை உணர்த்தவும், உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இலங்கை பிரச்சனையில் திமுக-அதிமுக ஒன்றே:
இந் நிலையில் மன்னார்குடியில் இலங்கை அதிபர் ராஜபக்சே போர் குற்றவாளி-ஐ.நா. அறிக்கை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய வைகோ, புரட்சியால் உருவான கியூபா போன்ற நாடுகளின் பச்சை துரோகமும், பொதுவுடைமை பேசும் நாடுகளின் தவறான பார்வை, இந்தியா வழங்கிய நிதி, ஆயுதம், ராணுவ உதவி ஆகியவையே ஈழ போராட்டத்தின் வெற்றிக்கு தடையாக அமைந்து விட்டன.
எனினும் ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்கு பொருளாதார தடை விதித்து வரிவிலக்கு, ரத்து செய்வது போன்ற தீர்மானங்களை நிறைவேற்றி இருப்பதன் மூலம் நம்பிக்கை ஒளி ஏற்றப்பட்டுள்ளது.
ஈழ பிரச்சனையை தீர்க்க பல சந்தர்ப்பங்கள் கிடைத்தும் கருணாநிதி சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. இந்தப் பிரச்சனையில் துரோகம் செய்ததால் தேர்தல் முடிவின் மூலம் மக்களால் திமுக ஆட்சி தூக்கி எறியப்பட்டுள்ளது.
ஈழப் பிரச்சனை தீர்வுக்கு மத்திய அரசு தான் பொறுப்பு என கருணாநிதி தட்டி கழித்தார்.
அதே நிலைபாட்டை ஒத்து தான் அதிமுகவின் செயல்பாடும் இருக்கிறது என்பதை சட்டபேரவையில் ஆளுனர் உரையின் முலம் அறிந்து கொள்ள முடிகிறது.
இது நல்ல முடிவு அல்ல என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். ராஜபக்சேவை போர் குற்றவாளி கூண்டில் ஏற்றி விசாரிக்க வேண்டும் என்று சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் வகையில் ஆளுனர் உரைக்கு முதல்வர் அளிக்கும் பதிலுரை இருக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications