தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை: ஜூன் 15ல் பாமக போராட்டம்
சென்னை: தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழக மாணவர் சங்கம் சார்பில் வரும் 15-ம் தேதி தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அடிப்படை கல்வி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை அனைத்து தரப்பினருக்கும் இலவச கல்வி கிடைக்க வேண்டும் என்பதே பாமகவின் கொள்கை. இதற்காக கோத்தாரிக் குழு பரிந்துரைப்படி நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தி மதிப்பில் 6 சதவீதத்தை கல்விக்காக ஒதுக்க வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கையை நிறைவேற்றக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது.
தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பாமக பல வழக்குகளை தொடர்ந்தது. அதனால் தான் தமிழகத்தில் கல்வி கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆயினும் கட்டணக் கொள்ளை தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது வேதனை அளிக்கிறது.
இந்த விஷயத்தில் பெற்றோர்கள் புகார் அளிக்காமல் நாங்கள் நேரடியாகத் தலையிட முடியாது என்கிறது அரசு. பிள்ளைகள் பள்ளி நிர்வாகத்திடம் பிணைக் கைதிகளாக இருக்கையில் பெற்றோர் எவ்வாறு புகார் கொடுப்பார்கள்.
எனவே, கட்டண நிர்ணயக் குழு மூலம் கட்டணத்தை நிர்ணயிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை அனைத்துப பள்ளிகளும் செயல்படுத்த வேண்டும். அரசின் உத்தரவை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது பெற்றோர்கள் புகார் தருவார்கள் என்று எதிர்பார்க்காமல் தனிப் படை மூலமாகவும், உளவுப் பிரிவின் மூலமாகவும் கொள்ளையடிக்கும் பள்ளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழக மாணவர் சங்கம் சார்பில் வரும் 15-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை நினைவரங்கம் அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும். இதில் தமிழக மாணவர் சங்க நிர்வாகிகள் மற்றும் கல்வியாளர்கள் கலந்துகொள்வார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications