சிறுமியைக் கற்பழித்துக் கொன்ற சிறுவன் தாயைக் கொல்ல முயற்சி
கொல்லம்: நான்கு வயது சிறுமியைக் கொன்ற சிறுவன் தனது பெற்றோருக்கு உணவில் விஷம் வைத்துள்ளான் என்னும் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள முத்தலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவருடைய மனைவி மாலதி. இவர்களி்ன் 4 வயது மகள் ஸ்ரீஜா. எல்கேஜி படித்து வந்தாள். சசிகுமாரும், மாலதியும் கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள ஆனவிலாசம் ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்கின்றனர்.
இருவரும் இங்குள்ள காலனியி்ல் தங்கியுள்ளனர். பள்ளி விடுமுறை என்பதால் முத்தலாபுரத்தில் இருந்து ஸ்ரீஜாவை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தனர். சசிகுமாரும், மாலதியும் வேலைக்கு செல்லும்போது ஸ்ரீஜாவை வீட்டில் விட்டு விட்டு செல்வார்கள்.
கடந்த 1-ம் தேதி இருவரும் வழக்கம்போல் வேலைக்கு சென்றனர். அன்று மாலை அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் ஏலக்காய் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுமியின் சடலத்தை பார்த்தனர்.
தகவல் அறிந்த குமுளி போலீசார் அங்கு வந்து சிறுமி உடலை கோட்டயம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டது.
இதையடுத்து பக்கத்து வீட்டு 13 வயது சிறுவன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவனை ரகசியமாக கண்காணிக்கும்படி சிறுவனின் பெற்றோரிடம் கூறினர். இதையறிந்த சிறுவன் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரை கொல்வதற்காக சாப்பாட்டில் விஷம் கலந்தான். இதை பார்த்த தாய் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் அவனிடம் விசாரணை நடத்தியதில் ஸ்ரீஜாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டான். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீஜாவை வாழைப்பழம் வாங்கி தருவதாக கூறி ஏலக்காய் தோட்டத்துக்கு அழைத்து சென்றுள்ளான்.
அங்கு பலாத்காரம் செய்து கொன்று விட்டு உடலை அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக சிகரெட் லைட்டரால் முகத்தை எரித்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளான். சிறுமியின் உடலை பார்த்த கூட்டத்தில் இவனும் இருந்துள்ளான். இதனால் போலீசாருக்கு முதலில் இவன் மீது சந்தேகம் ஏற்படவில்லை. பின்னர் விசாரணையில் சிறுவன் சிக்கியுள்ளான். அவனை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.