சட்டசபையில் சத்தமாக ஒலித்த 'ரிங்டோன்'-'கொல்'லென்று எழுந்த சிரிப்பு!
சென்னை: செல்போனை அனைவரும் ஸ்விட்ச் ஆப்செய்து விட்டு வாருங்கள் என்று சபாநாயகர் ஜெயக்குமார் சொல்லி வாய் மூடுவதற்குள், ஒருவரது செல்போனிலிருந்து சரவணப் பொய்கையில் நீராடி என்று ரிங் டோன் அடிக்கவே, சபையில் 'கொல்'லென்று சிரிப்பொலி எழுந்தது.
சட்டசபையில் நேற்று சபாநாயகர் ஜெயக்குமார் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவர் கூறுகையில்,
சட்டமன்ற மாற்றுத் தலைவர்களாக பொள்ளாச்சி ஜெயராமன் (அ.தி.மு.க.), தங்க தமிழ்ச்செல்வன் (அ.தி.மு.க.), செ.தாமோதரன் (அ.தி.மு.க.), வெங்கடேசன் (தே.மு.தி.க.), டில்லி பாபு (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோரை அறிவிக்கிறேன்.
இப்போது உறுப்பினர்களிடம் இருந்து கேள்விகள் வந்து கொண்டிருப்பதால், அந்தந்த துறை செயலாளர்கள் உடனுக்குடன் பதில்களை தயாரித்து அளிக்கும்படி வலியுறுத்த அமைச்சர்களை கேட்டுக் கொள்கிறேன். பதில்கள் தயாராகி வரும் வரை சில நாட்கள் அவையில் கேள்வி நேரம் இடம்பெறாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவையில் அவ்வப்போது செல்போன் ஒலிக்கும் ஓசை கேட்டுக் கொண்டிருப்பதாக புகார்கள் வருவதால், அவைக்கு வரும் உறுப்பினர்களும், அலுவல் சார்பாக வருபவர்களும் செல்போன்களை ஆப்' செய்து கொண்டுவரும்படி கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
அவர் இப்படிச் சொல்லி வாய் மூடுவதற்குள் அவை வாசலிலிருந்த அவை ஊழியர் ஒருவரின் செல்போன் சரவணப் பொய்கையில் நீராடி என்று சத்தமாக ஒலிக்கவே நிசப்தமாக இருந்த அவையில் 'கொல்'லென்று சிரிப்பொலி எழுந்து அடங்கியது.