மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி
மைசூர்: மைசூர் நகருக்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகள் நகரையே ஸ்தம்பிக்க வைத்து விட்டன. ஒரு யானை தாக்கியதில் வங்கிக் காவலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மைசூர் நகருக்குள் இன்று அதிகாலையில் இரண்டு காட்டு யானைகள் புகுந்து விட்டன. தாறுமாறாக ஓடிய அந்த யானைகளால் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக வனத்துறையினரும், தீயணைப்புத் துறையினரும், காவல்படையினரும் விரைந்து வந்தனர். நகர் முழுவதும் அந்த யானைகள் தாறுமாறாக ஓடி அமர்க்களம் செய்ய ஆரம்பித்ததால், மக்கள் யாரும் வீடுகளை விட்டு வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் எஸ்.ஏ.ராமதாஸ் கூறுகையில், இன்று காலை 6 மணியளவில் இந்த யானைகள் அருகில் உள்ள காட்டிலிருந்து புகுந்தன. புறநகர்ப் பகுதிகளில் இவை பெரும் அமளியில் ஈடுபட்டன. யானை தாக்கியதில் வங்கிக் காவலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றார்.
கிட்டத்தட்ட 3 மணி நேரம் இந்த இரு யானைகளும் மைசூரையே தடம்புரள வைத்து விட்டன. இந்த அமளி காரணமாக மைசூர் நகரில் இன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. நகரமே பெரும் பரபரப்பில் மூழ்கிக் கிடந்தது.
கடும் போராட்டத்திற்குப் பின்னர் இந்த இருயானைகளையும் மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், அவற்றைப் பிடித்துக் கட்டினர்.
யானை தாக்கி உயிரிழந்தவர் பெயர் ரேணுகாபிரசாத். இவருக்கு வயது 55. பாம்பூ பஸாரில் வசித்து வந்தவர்.
வங்கிக் காவலாளியான இவர் இன்று காலை தனது வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது அங்கு நின்றிருந்த காட்டு யானைகளில் ஒன்று ரேணுகா பிரசாத்தை தூக்கி தாக்கி எறிந்தது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் எதியூரப்பா, பிரசாத்தின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீட்டை அறிவித்துள்ளார்.
மைசூர் மகளிர் கல்லூரி ஒன்றுக்குள் புகுந்த ஒரு யானை அந்த இடத்தை சூறையாடி விட்டது. பின்னர் இன்னொரு யானை அருகில் உள்ள மார்கெட்டுக்குள் புகுந்தது. அப்போது வழியில் குறுக்கிட்ட ஒரு பசு மாட்டை அந்த யானை மிதித்துக் கொன்றது.












Click it and Unblock the Notifications