கருப்புப் பணத்தை ஒழிப்பது தொடர்பாக மேலும் ஒரு குழுவை அமைத்தது அரசு
டெல்லி: கருப்புப் பணத்தை ஒழிப்பது தொடர்பான நடவடிக்கைகளுக்காக மேலும் ஒரு குழுவை அமைத்துள்ளது மத்திய அரசு.
கருப்புப் பணம் ஒழிப்பு தொடர்பாக மத்திய அரசு கிணற்றில் போட்ட கல்லாக இருப்பதாக நீதித்துறை, பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் என சகல தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். போதிய நடவடிக்கையை அரசு இதுவரை எடுக்கவில்லை என்று அன்னா ஹஸாரே, ராம்தேவ் உள்ளிட்டோரும் குற்றம் சாட்டி வருகினன்றனர்.
இந்த நிலையில் வரி ஏய்ப்பாளர்கள கண்டுபிடித்து அவர்களிடமிருந்து கருப்புப் பணத்தை பறிமுதல் செய்வது, வரிகளை முறையாக வசூலிப்பது உள்ளிட்டவை குறித்து அரசுக்கு யோசனை தெரிவிப்பதற்காக ஒரு குழுவை அரசு அறிவித்துள்ளது.
நிதி அமைச்சகத்தின் மத்திய நேரடி வரிகள் வாரியம் இந்த கமிட்டியை அமைத்துள்ளது. இந்தக் குழு அரசுக்கு தனது யோசனைகளைத் தெரிவிக்கும். மேலும் வரி ஏய்ப்பாளர்களை மக்களிடம் அம்பலப்படுத்தும் வகையில் அவர்களின் விவரங்களை பொதுமக்கள் மத்தியில் பகிரங்கமாக வெளியிடுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் இந்த கமிட்டி அரசுக்கு ஆலோசனை தெரிவிக்கும்.
அன்னா ஹஸாரே நேற்று டெல்லி காந்தி சமாதியில் உண்ணாவிரதம் இருந்தபோது பல ஆயிரம் பேர் அங்கு திரண்டது மத்திய அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் லோக்பால் சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன் என்றும் அன்னா எச்சரித்துள்ளார். இதனால் மத்திய அரசு சற்றே ஆடிப் போயுள்ளது. இந்த நிலையில் தற்போதைய குழுவை அது அறிவித்துள்ளது.
ஏற்கனவே இதேபோல ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications