ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு ஜூன் 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை வரும் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணையின்போது ஏற்கனவே விசாரிக்கப்பட்ட 10 சாட்சிகளிடம் மறுவிசாரணை நடத்துமாறு சசிகலா சார்பில் கடந்த 3-ம் தேதி தாக்கல் செய்த மனுவை நீதிபதி மல்லிகார்ஜுனையா தள்ளுபடி செய்தார்.
ஆடிட்டர் பாலாஜியிடம் மறுவிசாரணை நடத்தக் கோரிய மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடந்து கொண்டிருப்பதால், அந்த உத்தரவு வரும் வரை இந்த வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்குமாறு சசிகலா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு அரசு உதவி வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது,
உச்ச நீதிமன்றமும், கர்நாடக நீதிமன்றமும் இந்த வழக்கு விசாரணை தினமும் நடக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் மேல்முறையீட்டு மனு குறித்து கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கலாம் என்பதால், சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை அன்றைக்கே ஒத்திவைக்கலாம். ஒரு வாரம் ஒத்திவைப்பது அதிகம் என்று கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சசிகலா மனுவை ஏற்று வழக்கு விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications