வன்முறையை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்-ராம்தேவுக்கு ஹசாரே கண்டனம்

11 ஆயிரம் பேரைக் கொண்ட ஆயுதப் படையை அமைக்கப் போவதாக ராம்தேவ் கூறியுள்ளார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்போம் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.
ராம்தேவின் பேச்சால் அன்னா ஹஸாரே தலைமையிலான ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கு பெரும் சங்கடமாகியுள்ளது. ராம்தேவின் அறிவிப்பு குறித்து அன்னாவின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம் அகமது நகரில் செய்தியாளர்களிடம் அன்னா பேசுகையில், நான் வன்முறையை வெறுப்பவன். ஆயுதப் படையை உருவாக்குபவருடன் நான் ஒருபோதும் இணைந்து பணியாற்ற மாட்டேன். நான் ராம்தேவை இப்போதைக்கு சந்திக்கவும் போவதில்லை. இதனால் எங்களது அமைதிப் போராட்டத்திற்கு களங்கம் ஏற்படக் கூடும்.
நானும் சரி, ராம்தேவும் சரி ஊழலுக்கு எதிராக போராடி வருகிறோம். அதேசமயம், எங்களது போராட்டம் வன்முறைப் பாதையில் செல்லக் கூடியதல்ல.
வன்முறையின் மூலம் நாம் எதையும் சாதிக்க முடியாது. எங்களுடைய சுதந்திரப் போராட்டம் அகிம்சை வழியிலானது. ஊழலுக்கு எதிரான 2வது சுதந்திரப் போராட்டத்தை நான் அகிம்சை வழியில்தான் நடத்தப் போகிறேன்.
நாம் வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் பெற்று விட்டோம். ஆனால் வறுமை, அநீதி, கருப்புப் பணம் ஆகியவை நம்மை விட்டுப் போகவில்லை. இந்த 2வது சுதந்திரப் போராட்டம் இவற்றை ஒழிக்க உதவும் என்றார் அன்னா.












Click it and Unblock the Notifications