சமச்சீர் கல்வி தொடரும் என்ற உத்தரவால் மாணவர்கள், பெற்றோர் பெரும் குழப்பம்
சென்னை: சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பு ஆண்டிலும் தொடர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சமச்சீர் கல்வித் திட்டம் நடப்பு ஆண்டுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இதுதொடர்பான சட்ட திருத்த மசோதாவும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த மசோதாவுக்கு உயர்நீதிமன்றம் இன்று இடைக்கால தடை பிறப்பித்து விட்டது.
சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்த தமிழக அரசு புதிய பாடப் புத்தகங்களை அச்சடிக்க உத்தரவிட்டது. இதற்கு வசதியாக பள்ளிகள் திறப்பை ஜூன் 15ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது. இதையடுத்து புதிய பாடப் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தொடங்கியது.
மேலும் சமச்சீர் கல்வித் திட்ட பாடப் புத்தகங்கள் கடாசப்பட்டன. இந்த நிலையில் தற்போதைய உச்சநீதிமன்ற உத்தரவால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவால் எழுந்துள்ள குழப்பங்கள்
- தற்போது அச்சடிக்கப்பட்டு வரும் புதிய பாடப் புத்தகங்கள் கதி என்னவாகும்
- உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றத்துக்குப் போனால் தீர்ப்பு உடனடியாக வராது என்ற நிலை. காரணம், உச்சநீதிமன்றத்திற்கு தற்போது கோடை விடுமுறை. ஒரு மாதத்திற்குப் பிறகே தீர்ப்பு வரும் வாய்ப்புள்ளதால் பள்ளிகளை 15ம் தேதியும் திறக்க முடியாத நிலை ஏற்படும்.
- பள்ளிகள் திறப்பு மேலும் தாமதமானால், சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை நடத்த நேரிடும். காலாண்டு, அரையாண்டு விடுமுறைகள் ரத்தாகக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
சமச்சீர் கல்வித் திட்டம் தொடர வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து தமிழக அரசு எடுக்கப் போகும் நிலை என்ன என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
மாணவர்களும், பெற்றோர்களும் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர். ஏற்கனவே பள்ளிகள் திறப்பு தாமதமாகியுள்ள நிலையில் தற்போது எந்தப் பாடத் திட்டம் என்பதே பெரும் கேள்விக்குறியாகியுள்ளதால் தமிழகம் முழுவதும் பெரும் குழப்பம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications