இலவச பட்டா கேட்டு கிராமத்தினர் இரண்டாவது நாளாக போராட்டம்
களக்காடு: இலவச பட்டா வழங்கக் கோரி காட்டுப் பகுதியில் குடியேறிய மக்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
களக்காடு அருகேயுள்ள சிதம்பராபுரம் முத்துநகரைச் சேர்ந்தவர்கள் இலவச வீட்டு மனை கேட்டு அதிகாரிகளிடம் மனு கொடுத்து வந்தனர். கடந்த 10 நாட்களுக்கு முன் களக்காடு மலையடிவாரத்தில் உள்ள காட்டுப் பகுதியான கூட்டுவடலி என்ற இடத்தில் தங்களுக்கு இடம் ஒதுக்கி பட்டா தருமாறு வருவாய் துறையினருக்கு மனு அளித்தனர்.
ஆனால் அந்த இடம் சென்னை ஆயுர்வேத அறிவியல் முன்னேற்ற மையம் மற்றும் அறக்கட்டளையினருக்கு சொந்தமானது என்பதால் அதற்கு பட்டா கொடுக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று பகல் முத்துநகர் கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் குடுமத்தினருடன் அந்த பகுதிக்கு சென்று குடிசைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதை கண்ட ஆயுர்வேத அறக்கட்டளை இயக்குனர் செல்வகுமார் தனது நிலத்தில் பொதுமக்கள் அத்துமீறி நுழைந்ததாக புகார் தெரிவித்தார்.
களக்காடு போலீசார் அங்கு சென்று குடிசை அமைக்க பொதுமக்கள் கொண்டு வந்த கம்புகள் மற்றம் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இலவச வீட்டு மனை பட்டா தரும்வரை இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று 2-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications