தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம்: 13-ம் தேதி வெளியிடுகிறார் நீதிபதி ரவிராஜபாண்டியன்
சென்னை: தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை வரையறுக்க நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி ரவிராஜபாண்டியன் கமிட்டி, வரும் ஜூன் 13-ம் தேதி கட்டண விவரங்களை வெளியிடுகிறது.
தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை முறைப்படுத்த நீதிபதி கோவிந்த ராஜன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 11,500 தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்து அறிவித்தது.
கமிட்டி நிர்ணயித்த கல்வி கட்டணத்தை கொண்டு பள்ளியை நடத்த இயலாது, உயர்த்தி தர வேண்டும் என்று 6400 தனியார் பள்ளிகள் மேல் முறையீடு செய்தன. மேல் முறையீட்டு மனுக்கள் மீது ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது.
ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளையும் தனித் தனியாக அழைத்து விசாரித்தனர். கட்டணத்தை உயர்த்தி கேட்பதற்கான காரணங்கள் அதற்கான சான்றுகளை ஆய்வு செய்தனர். பள்ளிகளின் கட்டமைப்பு வசதி, ஆசிரியர் சம்பளம், நிர்வாக செலவு உள்ளிட்ட செலவினங்களுக்கான தணிக்கை சான்றை கமிட்டியில் உள்ள ஆடிட்டர்கள் ஆய்வு செய்தனர்.
6400 பள்ளிகள் மீதான விசாரணை முடிந்துவிட்டது. அதைத் தொடர்ந்து குழுவினர் பள்ளிகளில் செலவினங்கள் குறித்த ஆடிட்டர் அறிக்கையை ஆய்வு செய்து கட்டணத்தை நிர்ணயித்துள்ளனர். முறையான ஆவணங்கள் இல்லாத, தணிக்கை சான்று இல்லாத பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை.
கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கட்டணமே பொருந்தும். மேல் முறையீடு செய்துள்ள பெரும்பாலான பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 25 சதவீதம் வரை கட்டணம் உயர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையிலான குழுவினர் ஏறக்குறைய அனைத்து பணிகளையும் முடித்துவிட்டனர்.
இன்னும் 400 பள்ளிகளுக்கு ஆடிட்டர்கள் கையெழுத்திட வேண்டும். அந்த பணி மட்டுமே நிலுவையில் உள்ளது. அனைத்துப் பள்ளிகளும் 15-ந்தேதி திறக்கப்படுகிறது
இறுதி கட்ட பணி குறித்தும், புதிய கல்வி கட்டணம் வெளியிடுவது குறித்தும் நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையில் அதிகாரிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது.
இதில் புதிய கல்வி கட்டணம் கட்டண நிர்ணயம் குறித்த அறிவிப்பு 13-ந்தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications