அனல் மின் நிலைய கட்டுமானப் பணி-100 அடி தூணிலிருந்து தவறி விழுந்து இருவர் பலி
தூத்துக்குடி & வேலூர்: தூத்துக்குடியில் கட்டப்பட்டு வரும் அனல் மின் நிலையத்தில் பீகாரைச் சேர்ந்த இரு தொழிலாளர்கள் 100 அடி தூணில் இருந்து கீழே விழுந்து உடல் சிதறி பலியாயினர்.
தமிழ்நாடு மின்சார வாரியம்- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஆகியவை இணைந்து தூத்துக்குடியில் புதிய அனல் மின் நிலையத்தை அமைத்து வருகின்றன.
இதற்கான கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் பீகாரை சேர்ந்த தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இதில், பிரேந்தர் மற்றும் நரேந்திர குமார் ஆகிய இருவரும் 100 உயரம் கொண்ட தூண் ஒன்றில் வெல்டிங் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நிலை தடுமாறி இருவரும் கீழே தவறி விழுந்ததில் உடல் சிதறி இருவரும் பலியாயினர்.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் இளைஞர் தற்கொலை:
வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சத்துவாச்சாரியில் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ளது.
அலுவலக வளாகத்தில் இன்று காலை அப் பகுதியில் சென்ற பொது மக்கள் அங்கு உள்ள வேப்பமரத்தில் நைலான் கயிற்றால் தூக்குபோட்ட நிலையில் வாலிபர் பிணம் தொங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த வாலிபருக்கு வயது சுமார் 35 இருக்கும். நீல கலர் பேண்டும், வெள்ளை சட்டையும் அணிந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications