ஆ. ராசாவை கைவிட்டு விட்டது திமுக: நிர்வாகிகள், தொண்டர்கள் குமுறல்
கரூர்: திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவை திமுக கைவிட்டுவிட்டதாக திமுக தொண்டர்கள் மத்தியில் குமுறல் எழுந்துள்ளது.
சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல் முறையாக திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் கடந்த 10-ம் தேதி நடந்தது.
2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஆ. ராசா ஊழல் செய்துள்ளார் என்றும், அதற்கான ஆதராம் இருப்பதாகக் கூறி சிபிஐ போலீசார் அவரை கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.
இதே போன்று திமுகவைச் சேர்ந்த எம்.பியும், முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழிக்கும் இந்த விவகாரத்தில் தொடர்புள்ளதாகக் கூறி அவரையும், கலைஞர் தொலைக்காட்சி இயக்குனர் சரத்குமார் ரெட்டியையும் சி.பி.ஐ. கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளது.
இந்த நிலையில் திமுகவின் உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் கடந்த 10-ம் தேதி சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் சி.பி.ஐ. நடவடிக்கையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக எம்.பி. கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் இயக்குனர் சரத்குமார் ஆகியோரை சி.பி.ஐ. குற்றவாளிகளாக சேர்த்து இருப்பது முற்றிலும் தவறானது என்றும், அதை கண்டிப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஆனால் இந்த தீர்மானத்தில் முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசாவின் பெயர் இடம் பெறவில்லை.
இது குறித்து திமுக மூத்த நிர்வாகிகளும், திமுக தொண்டர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளளதாக கூறப்படுகின்றது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முதல் ஆளாக கைது செய்யப்பட்டவர் ராசாதான். அப்போது ராசாவுக்காக திமுக தீவிரமாக குரல் கொடுத்து வந்தது. ஆனால் தற்போது கருணாநிதியின் மகள் கனிமொழிக்காக மட்டுமே திமுக தலைமை பெரும் கவலைப்படுவதாக திமுகவினர் மத்தியில் முனுமுனுப்பும், குமுறலும் வெடித்துள்ளது.












Click it and Unblock the Notifications