என்னைப் பற்றி அவதூறாகப் பேசும் காங். தலைவர்களை அடக்குங்கள்-சோனியாவுக்கு அன்னா கடிதம்

இதுதொடர்பாக அன்னா எழுதியுள்ள 3 பக்க கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
என்னையும், எனது சத்தியமான போராட்டத்தையும் அவதூறு செய்யும் வகையில், சில காங்கிரஸ் தலைவர்கள் பொது மக்கள் மத்தியில் பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறி சேற்றை வாரி இறைக்கும்வகையில் பேசி வருகின்றனர்.
இதுபோன்ற பேச்சுக்கள், எனது புகழைக் கெடுக்கும் சதிச் செயலாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது. மேலும் ஏப்ரல் மாதத்தில் நான் நடத்திய மிகப் பெரிய போராட்டத்தைப் போல எதிர்காலத்தில் நடத்தக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர்கள் மறைமுகமாக விடுக்கும் எச்சரிக்கையாகவும் எடுக்க வேண்டியுள்ளது.
இவர்களது பேச்சுக்களால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். லோக்பால் மசோதா குறித்து மக்களை திசை திருப்பும் வகையில் இவர்களது பேச்சுக்கள் உள்ளன. மேலும் எனது கேரக்டரை படுகொலை செய்யும் வேலையில் இவர்கள் இறங்கியுள்ளனர். பொறுப்பான உங்களது கட்சித் தலைவர்கள் இதுபோல தொடர்ந்து நடந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்களது கடமை.
என் மீதான புகார்களுக்கு அவர்களிடம் வலுவான ஆதாரங்கள் இருந்தால் தயவு செய்து அதை பகிரங்கமாக வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் பொறுப்பான தலைவர்கள் இதுபோல பேசுவது நாட்டுக்கு நல்லது. மக்களின் பிரச்சினைகளைத் திசை திருப்பி, ஆட்சி அதிகாரத்தில் நீடிப்பதற்காக இவ்வாறு பொய் பேசுவதும் நல்லதல்ல.
எனக்கு இப்போது 73 வயதாகிறது. இந்த வயதில் போய் என்னைப் பார்த்து நீங்கள் பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸின் முகமூடி என்று உங்களது கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுவது வேதனையாக இருக்கிறது. நான் எனது வாழ்நாளில் ஒருபோதும் எந்தக் கட்சியுடனும் நெருங்கிப் பழகியதில்லை. யாருடனும் இணைந்து செயல்பட்டதில்லை. காரணம், எல்லாக் கட்சியிலுமே ஊழல் உள்ளது, ஊழல்வாதிகள் உள்ளனர் என்பதால்.
ஊழல் பிரச்சினை காரணமாக நான் குஜராத் அரசையும் விமர்சித்துள்ளேன். நான் பாஜகவுடன் நெருங்கிப் பழகுபவன் என்றால் அப்படிக் கூறியிருப்பேனா.
ராம்தேவின் போராட்டத்தில் மதச்சாயம் கலக்காமல் இருந்தால் நான் பங்கேற்பேன் என்றுதான் கூறியிருந்தேன். மற்றபடி ராம்தேவின் போராட்டத்தை நான் கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை.
ஏப்ரல் மாதத்தில் நான் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தின்போது எந்த அரசியல் கட்சியினரையும் என்னுடன் உண்ணாவிரத மேடையில் அமர நான் அனுமதிக்கவில்லை. அனைவருக்கும் இது தெரியும். உங்களுக்கும் இது தெரியும். இப்படிப்பட்ட நிலையில் என்னை அவதூறுப்படுத்தும் வகையில் உங்களது கட்சியினர் பேசுவது நியாயமா?
மகாராஷ்டிராவில் ஊழல் செய்த அத்தனை கட்சிகளுக்கு எதிராகவும் நான் போராடியுள்ளேன். சிவசேனா, காங்கிரஸ், பாஜக என யாரெல்லாம் ஊழல் செய்தார்களோ அவர்களை எதிர்த்துப் போராடியுள்ளேன். பல ஊழல் தலைவர்களை பதவிகளிலிருந்து மக்கள் எதிர்ப்பின் காரணமாக அகற்றியுள்ளேன்.
ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இல்லாவிட்டால் நான் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பது உறுதி. எனது உயிரைக் கூட தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன்.
என் மீது மட்டுமல்லாமல் லோக்பால் மசோதா தொடர்பான கூட்டுக் குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களான சாந்திபூஷன், பிரஷாந்த் பூஷன், சந்தோஷ் ஹெக்டே மீதும் அவதூறை அள்ளி வீசுகிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.
எனவே ஊழலுக்கு எதிராக அணி திரண்டுள்ள மக்கள் பிரதிநிதிகள் மீது களங்கத்தை சுமத்தி, அவதூறை சுமத்தி, மக்கள் முன்பு அவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த கெட்ட எண்ணத்துடன் சிலர் செயல்படுவது தெரிகிறது என்று கூறியுள்ளார் அன்னா.












Click it and Unblock the Notifications