'நட்புக்காக கொலை'-என்ஜினீயர் கொலையில் கைதான பெண் வாக்குமூலம்
திண்டிவனம்: தந்தையுடன் ஏற்பட்ட நட்பினால் மகளின் காதல் கணவனை கொலை செய்ததாக சென்னை என்ஜினீயர் பார்த்தசாரதி கொலை வழக்கில் கைதான சலுஜா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை தரமணி டைடல் பார்க்கில் உள்ள கால்சென்டரில் பணியாற்றிய என்ஜீனியர் பார்த்தசாராதியும் (24), காஞ்சீபுரம் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி சரண்யாவும் அவரது பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டார்.
இது சரண்யாவின் தந்தையான சென்னை குடிநீர் வடிகால் வாரிய என்ஜினீயர் நரசிம்மனுக்கு பிடிக்காததால் பார்த்தசாரதியை கூலிப்படை வைத்து கொலை செய்ய ஏற்பாடு செய்தார். அதன்படி கடந்த 2ம் தேதி பணிக்குக் சென்ற பார்த்தசாரதி கடத்திச் செல்லப்பட்டு, கொலை செய்யப்பட்டு திண்டிவனம் அருகே ஓங்கூர் மேம்பாலத்தின் கீழ் உடல் எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இந்தக் கொலை வழக்கு தொடர்பாக சென்னை பெரம்பூரை சேர்ந்த நரசிம்மன் (சரண்யாவின் தந்தை), வில்லிவாக்கத்தை சேர்ந்த சலுஜா, நந்தகுமார் மகன்கள் ஜானகிராமன், ஹேமந்த்ராம் மற்றும் கார் டிரைவர் திலீப் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலை குறித்து சலுஜா அளித்த வாக்குமூலம்:
சென்னையில் உள்ள திருமண தகவல் மையத்தில் பணிபுரிந்து வந்தபோது நரசிம்மன் தனது மகள் சரண்யாவிற்கு மாப்பிள்ளை பார்க்க திருமண தகவல் மையத்திற்கு வந்தார். அவர் கலகலப்புடன் பேசியது எனக்கு மிகவும் பிடித்தது.
இதனை தொடர்ந்து நான் தியானம் செய்ய ஒரு தியான மையத்திற்கு சென்றேன். அங்கேயும் நரசிம்மன் வந்திருந்தார். அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதால் நட்புரீதியாக அவருடன் பழகினேன். பின்னர் நண்பர்களானோம்.
இந் நிலையில் தனது ஒரே மகள் சரண்யா, வேறு ஜாதியைச் சேர்ந்த பார்த்தசாரதியை காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், பார்த்தசாரதியை கொலை செய்ய உதவி செய்யும்படியும் நரசிம்மன் என்னிடம் கூறினார்.
நானும் உதவி செய்வதாக நம்பிக்கை தெரிவித்தேன். எனது பக்கத்து வீட்டை சேர்ந்த ஜானகிராமன், ஹேமந்த்ராமிடம் இது குறித்துக் கூறினேன். அவர்கள் 2 பேரும் மற்றொருவரான திலீப்பை அழைத்து வந்தனர். அவர்களிடம் பார்த்தசாரதியை காரில் கடத்தி சென்று, மிரட்டி சரண்யாவை பிரிக்கும்படி கூறினேன்.
அவர்கள் வாடகை காரில் பார்த்தசாரதியை கடத்தி சென்று மிரட்டியுள்ளனர். ஆனால் பார்த்தசாரதி பணியவில்லை. உடனே அந்த 3 பேரும் நரசிம்மனின் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, பார்த்தசாரதியை கொலை செய்து விதிடுங்கள் என்றார்.
இதையடுத்து பார்த்தசாரதியை கொலை செய்து எரித்துவிட்டு, தடயங்களை அழித்தனர். இந் நிலையில் போலீசில் மாட்டிக் கொண்டோம் என்று கூறியுள்ளார் சலுஜா.












Click it and Unblock the Notifications