ஆ. ராசாவை நீலகிரி எம்.பி. பதவியில் இருந்து நீக்க சபாநாயகருக்கு அதிமுக கோரிக்கை
குன்னூர்: ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி திகார் சிறையில் உள்ள திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவை நீலகிரி எம்.பி. பதவியில் இருந்து நீக்குமாறு மக்களவை சபாநாயகர் மீராகுமாருக்கு அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் மனு அனுப்பியுள்ளார்.
நீலகிரி மாவட்ட அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன் என்பவர் மக்களவை சபாநாயகர் மீரா குமாருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது,
நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ. ராசா 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனால் அவர் கடந்த 130 நாட்களாக மக்களவை கூட்டத் தொடரில் பங்கேற்கவில்லை.
இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 101 (4)-ன் படி, மக்களவை உறுப்பினர் ஒருவர் சபாநாயகரின் அனுமதியில்லாமல், 60 நாட்கள் மக்களவை கூட்டத்தில் பங்கேற்கவில்லையெனில் அவரை எம்.பி. பதவியில் இருந்து நீக்க வேண்டும், அந்த தொகுதியை காலி தொகுதியாக அறிவிக்க வேண்டும்.
மேலும் நீலகிரி எம்.பி. ஆ. ராசா கடந்த 130 நாட்களுக்கு மேலாக மக்களவை நடவடிக்கைகளில் ஈடுபடாமல் உள்ளார். அதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும்.
இவ்வாறு வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன் தனது மனுவில் கூறியுள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications