மாணவியை பலாத்காரம் செய்த காண்டிராக்டர் சென்னையில் கைது
கொச்சி: பணத்திற்கு ஆசைப்பட்டு பெற்ற மகளையே விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர் எர்ணாக்குளத்தை சேர்ந்த பெற்றோர்கள். அவர்களுக்கு உடந்தையாக இருந்து மாணவியை பலாத்காரம் செய்த குமரி கட்டட காண்டிராக்டரை கேரளா போலீசார் கைது செய்தனர்.
பள்ளி மாணவி
கேரள மாநிலம் எர்ணாகுளம் வாணியக்காடு பகுதியை சேர்ந்தவர் சுதீர் (39). இவருடைய மனைவி சுபைதா. இவர்களுக்கு 18 வயதுள்ள பிளஸ்-2 படிக்கும் மகள் உள்ளார். தனது மகளை சினிமாவில் நடிக்க வைத்து கோடி கோடியாக சம்பாதிக்க வேண்டும் என்ற விபரீத ஆசை சுதீர் மனதில் எழுந்தது. இதனையடுத்து கேரள சினிமாவிற்கு துணை நடிகைகளை அனுப்பிவைக்கும் வர்க்கலை சிறையின் கீழ் பகுதியை சேர்ந்த விஜயகுமாரை சந்தித்த சுதீர் தனது ஆசையை அவரிடம் தெரிவித்தார்.
பணத்திற்காக விபச்சாரம்
சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் தான் சொல்வதை கேட்க வேண்டும் என்று சுதிரிடம் விஜயகுமார் தெரிவித்தார். அதற்கு சம்மதம் தெரிவித்த சுதிர் அப்போது 9 ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த தனது மகளை விஜயகுமாரின் ஏற்பாட்டின் படி பலரது படுக்கையறைக்கு அனுப்பி வைத்தார். இதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்தும் எதுவும் எடுபடவில்லை.
திருவனந்தபுரம், எர்ணாகுளம் மற்றும் தமிழ்நாடு என பல இடங்களுக்கும் மாணவியை அனுப்புவதற்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வசூலித்ததாகவும் தெரிகிறது.
உறவினர்களிடம் மாணவி புகார்
பணத்திற்கு ஆசைப்பட்டு தந்தை சுதீருடன், தாய் சுபைதாவும் சேர்ந்து பெற்ற மகளையே பாலியல் தொழிலுக்கு அனுப்பினார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோரின் பிடியில் இருந்து தப்பி, பாலக்காட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று நடந்ததை தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இதுபற்றி எர்ணாகுளம் போலீசில் புகார் செய்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவியின் பெற்றோர் சுதீர்-சுபைதா உள்பட 65 பேரை குற்றவாளிகளாக சேர்த்தனர்.
காண்டிராக்டருக்கு தொடர்பு
இந்த சம்பவத்தில் குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள கண்ணுமாமூடு பளுகல் பகுதியை சேர்ந்த கட்டிட காண்டிராக்டரான மணிகண்டன் (42) என்பவருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது
ஒருமுறை ரூ.40 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு மாணவியை மணிகண்டனுடன் அனுப்பியுள்ளார் சுதீர். இதனைத்தொடர்ந்து மணிகண்டனை கைது செய்வதற்காக போலீசார் தேடுதல் வேட்டை நடத்திவந்தனர். இந்தநிலையில் மணிகண்டன் சென்னையில் பதுங்கி இருப்பதாகவும், சிங்கப்பூருக்கு விமானத்தில் தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கேரள போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சென்னை சென்ற கேரள போலீசார் விமானநிலையத்தில் வைத்து மணிகண்டனை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் குமரி மாவட்டத்தை சேர்ந்த சில அதிகாரிகளுக்கு மாணவி விருந்தாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மாணவி மட்டுமின்றி பல இளம் பெண்களை சில அரசு அதிகாரிகளுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும், வி.ஐ.பி.களுக்கும் மணிகண்டன் சப்ளை செய்து தனது காரியங்களை சாதித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
மாணவியின் வாழ்க்கையை சீரழித்த அனைவரது பெயரையும் குற்றப்பத்திரிகையில் சேர்க்க போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதற்கிடையே பாதுகாப்பு கருதி மாணவியை ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் போலீசார் தங்க வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications