தெல்கிக்கு 10 ஆண்டு கடுங்காவல்; ரூ.9 லட்சம் அபராதம்
புனே: நாசிக் முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் கரீம் தெல்கிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ 9 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 2000-2001-ம் ஆண்டுகளில் முத்திரைத் தாள் மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்துல்கரீம் தெல்கி என்பவர் முத்திரைத் தாள்களை போலியாக அச்சடித்து பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்து இருப்பது தெரிய வந்தது. அவர் மீது நாடெங்கும் பல நகரங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2001-ம் ஆண்டு கைதான தெல்கி கடந்த 10 ஆண்டுகளாக ஜெயில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் மீது 120(பி), 255, 256, 257, 258, 259 உள்பட பல பிரிவுகளில் வழக்குகள் உள்ளதால் அவர் விடுதலை ஆக முடியாமல் உள்ளார். தற்போது அவர் பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் முலண்ட் நீதிமன்றம் தெல்கிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 17.05 லட்சம் அபராதமும் விதித்தது.
இதற்கிடையே புனே நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. 2005-ம் ஆண்டு முதல் நடந்து வந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சர்தே சாய், போலி முத்திரை தாள் தயாரித்ததற்காக தெல்கிக்கு 10 ஆண்டு கடுங் காவல் தண்டனை விதித்துள்ளதாகக் கூறினார்.
அதோடு தெல்கிக்கு ரூ. 9 லட்சம் அபராதம் விதிப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் 6 ஆண்டு ஜெயில் தண்டனையை தெல்கி ஏற்கெனவே அனுபவித்து விட்டார். எனவே மேலும் 4 ஆண்டுகள் அவர் சிறைக்குள் இருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications