ராகுல் பற்றி பேச யாருக்கும் தகுதி கிடையாது-தங்கபாலு
சென்னை : ராகுல் காந்தியைக் குறை கூறிப் பேச யாருக்கும் தகுதி கிடையாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மரண அடி வாங்கியது. இதையடுத்து தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் தங்கபாலு. இருப்பினும் அவருக்குப் பதில் புதிய தலைவரை இன்னும் தேர்ந்தெடுக்க முடியாமல் தவிக்கிறது காங்கிரஸ் மேலிடம். காரணம், எந்தக் கோஷ்டியைச் சேர்ந்தவருக்கு தலைவர் பதவி கொடுப்பது என்ற குழப்பம்தான். இதனால் தங்கபாலு இன்னும் தலைவர் பதவியில் நீடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இவரது தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் இன்று ராகுல் காந்தியின் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
பின்னர் செய்தியாளர்கள் தங்கபாலுவைப் போய்ச் சந்தித்தனர். அப்போது அவரிடம், ராகுல் காந்தி பிரதமராக வர தகுதியில்லை என்று பாஜக கூறியுள்ளதே என்ற கேள்விக்கு,
ராஜீவ் காந்தி குடும்பம் இந்தியாவுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ராகுல் காந்தி பற்றி குறை சொல்ல யாருக்கும் தகுதி கிடையாது என்றார் தங்கபாலு.
ப.சிதம்பரம் மோசடியாக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். எனவே அவர் உடனடியாக விலக வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு இதற்கு ப.சிதம்பரமே பதில் சொல்வார் என்று 'சமயோஜிதமாக' பதிலளித்து விட்டுக் கிளம்பினார் தங்கபாலு.
இதற்கிடையே, ராகுல் காந்தியின் பிறந்த நாளை தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு கோஷ்டியும் வழக்கம் போல தனித் தனியாக கொண்டாடி மகிழ்ந்தது.












Click it and Unblock the Notifications