திமுக ஆட்சியில் நிர்வாகம் சீர்குலைந்து போயிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியுற்றேன்-ஜெயலலிதா

திருச்சியில் முகாமிட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, நேற்று ஸ்ரீரங்கத்தில் நடந்த அரசு விழாவில் பல்வேறு நலத் திட்டங்களைத் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு உதவிகளையும் வழங்கினார்.
விழாவில் முதல்வர் ஜெயலலலிதா பேசியதாவது:
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலையும், திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோயிலையும் உள்ளடக்கிய இந்த ஸ்ரீரங்கம் தொகுதியிலிருந்து என்னைத் தேர்வு செய்து முதல்வராக வாய்ப்பளித்த மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். வெற்றி பெற்றவுடன் வந்து நன்றி கூறத்தான் எண்ணினேன். ஆனால், அமைச்சரவை பதவியேற்பு, எம்எல்ஏக்கள் பதவியேற்பு, பேரவைத் தலைவர்- துணைத் தலைவர் தேர்வு, பிரதமருடன் சந்திப்பு, பேரவைக் கூட்டம், ஆளுநர் உரை ஆகியவற்றால் வர இயலவில்லை.
மக்களை விலை பேசி தமிழ்நாட்டை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற திமுகவினரின் கனவைத் தகர்த்து எறிந்து ஜனநாயகம் தழைக்கச் செய்திருக்கிறீர்கள். கிடைத்ததற்கரிய வைரம் மனிதனின் மதிப்பு என்பதை நிரூபித்திருக்கிறீர்கள். மனித உறவுகளை மேம்படுத்த நன்றி மனப்பான்மை முக்கியம். எனது நன்றியை எழுத்தால், நாவால் தெரிவிக்காமல் திட்டங்கள் மூலம் தெரிவிக்கத் திட்டமிட்டுள்ளேன்.
ஏழை, எளிய மக்கள் நேரடியாகப் பயன் பெறுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேர்தல் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு முதல் உத்தரவுகளைப் பிறப்பித்தேன். உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இலவச அரிசி வழங்கப்படுகிறது.
திருமண உதவித் தொகை ரூ. 25 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. பெண் கல்வி பெற்றால் அந்தக் குடும்பமே பயனடையும் என்ற வகையில் பட்டம்- பட்டயம் பெற்ற மகளிருக்கு திருமண உதவித் தொகை ரூ. 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டதுடன், 4 கிராம் தங்கமும் அளிக்கப்படுகிறது.
முதியோர், விதவை, ஆதரவற்ற பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ. 500-லிருந்து ரூ. 1000 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. மீன்பிடித் தடைக் காலத்தில் மீனவர்களுக்கான உதவித் தொகையை இரட்டிப்பாக்கி ரூ. 2,000 ஆக வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மனிதவள மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளன. இந்த ஆண்டு சுமார் 9 லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும். உள்கட்டமைப்பு, தொழிற்சாலை வளர்ச்சி மட்டுமே நாட்டு வளர்ச்சியல்ல என்பதை உணர்ந்து, பொருளாதார வளர்சிக்கான திட்டங்களும் செயல்படுத்தப்படும்.
வறுமையை முழுமையாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏழை, எளிய மக்களின் வளர்ச்சியை உள்ளடக்கிய வளர்ச்சியில் தீர்க்கமான நம்பிக்கை கொண்டிருக்கிறேன். கிராமங்களில் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு 300 சதுர அடியில் ரூ. 1.80 லட்சம் மதிப்பில் கட்டித் தரப்படும். அதேபோல, நகர்ப்புற ஏழை மக்களுக்கான புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
மிக்ஸி, மின் விசிறி, கிரைண்டர் ஆகியவை வழங்கும் பணி வரும் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்படும். ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம்தான் ஆகிறது. கடந்த திமுக ஆட்சியில் ஒட்டுமொத்த ஆட்சி நிர்வாகமும் சீர்குலைந்து போயிருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தேன். துறைதோறும் நிர்வாகச் சீர்குலைவை ஒழுங்குபடுத்தும் பணியை கடும் சவாலான பணியாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.
முந்தைய ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் ஆட்சியாளர்களுக்கான திட்டங்களாகவே இருந்தன. அதிமுக ஆட்சியில் மக்கள் நலனை முன்னிறுத்தியே திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும். வேறு யாரும் இத்திட்டங்கள் மூலம் பயன் பெற முடியாது. கல்வி, பொருளாதாரம், சமூக சீர்திருத்தம் ஆகியவற்றின் மூலம் சமதர்ம சமுதாயத்தை அமைக்க முற்படுகிறேன். தமிழகத்துக்கு இணை தமிழகம்தான் என்ற சிறப்பான நிலையை உருவாக்குவேன் என்றார் அவர்.
பத்திரிக்கையாளர்களிடம் துப்பாக்கியை காட்டிய அதிகாரி:
இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதா சென்ற கார் அணிவகுப்பில் இருந்த பாதுகாப்பு அதிகாரி பத்திரிக்கையாளர்களை நோக்கி துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதால், பரபரப்பு ஏற்பட்டது.
இன்று சங்கம் ஹோட்டலில் இருந்து கிளம்பிய ஜெயலலிதாவின் கார் அணிவகுப்பில் சென்ற பாதுகாப்பு அதிகாரி ஒருவர், உறையூர் அருகே அந்த கான்வாயை பின்தொடர்ந்த பத்திரிக்கையாளர்கள் டெம்போவை வழிமறித்து துப்பாக்கியைக் காட்டி, பின் தொடர வேண்டாம் என மிரட்டினார். இதையடுத்து அவர்கள் பாதியிலேயே நின்றுவிட்டனர்.
இந் நிலையில் பத்திரிக்கையாளர்கள் பின்தொடராததை கவனித்த முதல்வர் ஜெயலலிதா, இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகளை கேட்டுள்ளார். இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் அந்த அணிவகுப்பைத் அனுமதி அளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications