தாந்தோன்றிமலை திமுக கவுன்சிலர் ரவி மீது கொலை மிரட்டல் வழக்கு
கரூர்: நகர்மன்ற கூட்டத்தில் அதிகாரியை ஆபாசமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்த தாந்தோன்றிமலை திமுக கவுன்சிலர் ரவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தாந்தோன்றிமலை நகர் மன்றக் கூட்டம் அதன் தலைவர் ரேவதி ஜெயராஜ் (அதிமுக) தலைமையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்போது முன்னாள் நகர் மன்ற தலைவரும், 3 வது வார்டு திமுக கவுன்சிலருமான பெ. ரவி நகர் மன்ற நிர்வாகத்தையும், நகராட்சி செயல் அலுவலர் (பொ) ராஜாவையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு நகர் மன்றத் தலைவர் ரேவதி ஜெயராஜ் கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், நகர் மன்ற அலுவலகத்தில் நள்ளிரவில் அதிகாரிகள் சிலர் பெண்களுடன் வந்து செல்வதாக ரவி குற்றம் சாட்டினார். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாகக் கூறி தலைவர் ரேவதி ஜெயராஜ் கூட்டத்தை முடித்தார்.
இந்த நிலையில் தனிப்பட்ட முறையில் திமுக கவுன்சிலர் ரவி தன்னை திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி தாந்தோன்றிமலை நகராட்சி செயல் அலுவலர் சி. ராஜா பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் திமுக கவுன்சிலர் ரவி மீது ஆபாசமாக பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications