கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்! - ஜெயலலிதா
திருச்சி: தேர்தலின்போது தான் கொடுத்த அத்தனை வாக்குறுதிகளையும் கட்டாயம் நிறைவேற்றுவேன், என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தன்னை வெற்றி பெற செய்த ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக முதல்வர் ஜெயலலிதா திருச்சி மற்றும் ஸ்ரீரங்கத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
அப்போது ஸ்ரீரங்கம் தொகுதியில் பல வளர்ச்சி திட்டங்களையும், அடிப்படை வசதிகள் தொடர்பான அறிவிப்புகளையும் வெளியிட்டார். இரண்டாவது நாள் (திங்கட்கிழமை) நிகழ்ச்சியாக ஸ்ரீரங்கம் தொகுதி அந்தநல்லூர் ஒன்றியத்தை சேர்ந்த கிராமப்பகுதிகளில் ஜெயலலிதா சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். நேற்று மாலை 3.50 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா தான் தங்கி இருந்த சங்கம் ஓட்டலில் இருந்து வேனில் புறப்பட்டார்.
கோர்ட்டு எம்.ஜி.ஆர் சிலை, தென்னூர், தில்லைநகர், குடமுருட்டி பாலம் வழியாக முதல் நிகழ்ச்சியாக கம்பரசம்பேட்டை மெயின் ரோட்டில் வேனில் இருந்தபடியே வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் ஜெயலலிதா.
காவிரிக் கரையில்...
அவர் பேசிய இடம் காவிரி கரை ஆகும். மேட்டூர் அணை கடந்த 6-ந் தேதியே திறக்கப்பட்டு இருந்ததால் கரை புரண்டு ஓடிய காவிரி ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்த பெண்கள் மற்றும் ஆண்கள் ஈரத்துணியுடன் ஓடி வந்து முதல்வர் ஜெயலலிதாவை பார்த்து கை அசைத்தனர். ஏராளமான குழந்தைகள் ஜெயலலிதாவுக்கு இரட்டை இலை சின்னத்துடன் கையசைத்து வணக்கம் கூறினர்.
அவர்களைப் பார்த்து முதல் அமைச்சர் ஜெயலலிதா கும்பிட்டபடியே வணக்கம் தெரிவித்தார். புன்னகையுடன் கையசைத்து நன்றி தெரிவித்தார். இதனை தொடர்ந்து முத்தரச நல்லூர், அல்லூர், ஜீயபுரம் கடைவீதி, திருப்பராய்த்துறை, பெருமணி, காவல்காரன் பாளையம், பெட்டவாத்தலை, ஜீயபுரம், பெரிய கருப்பூர், குழுமணி, கோப்பு பாலம், எட்டரை ஆகிய இடங்களில் வேனில் இருந்தபடியே வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிவிட்டு இறுதியாக மணிகண்டம் ஒன்றியத்தை சேர்ந்த சோமரசம்பேட்டையில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.
நிறைவாக ஜெயலலிதா பேசுகையில், "நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்து, மூன்றாவது முறையாக என்னை தமிழக முதல் அமைச்சராக்கிய வாக்காள பெருமக்களாகிய உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஸ்ரீரங்கம் தொகுதி வாழ் மக்களின் நலனிற்காக அனைவரும் பயன் அடையும் வகையில் முதல் கட்டமாக 190 கோடி ரூபாய்க்கும் மேலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உள்ளேன். இவை அனைத்தும் விரைந்து முடிக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றுவேன் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்," என்றார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஸ்ரீரங்கம் தொகுதி மணிகண்டம் ஒன்றியத்தை சேர்ந்த கிராமங்களில் முதல்வர் ஜெயலலிதா இரண்டாவது நாளாக சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.