லோக்பால் குறித்து விவாதிக்க அவசரமாக கூடுகிறது காங். காரியக் கமிட்டி
டெல்லி: லோக்பால் மசோதா குறித்து பேசுவதற்காக இன்று காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் மாலையில் கூடுகிறது. லோக்பால் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்படுகிறது.
லோக்பால் சட்டத்தின் கீழ் பிரதமர் பதவியை ஏன் கொண்டு வரக் கூடாது என்று நாக்கைப் பிடுங்கிக் கொள்வது போல கேட்கிறார்கள் அன்னா ஹஸாரே உள்ளிட்ட சமூக சேவகர்கள் மற்றம் ஊழலுக்கு எதிராக அணி திரண்டு நிற்பவர்கள். ஆனால் இதுகுறித்து மத்திய அரசு மாற்றி மாற்றிப் பேசி குழப்பிக் கொண்டிருக்கிறது.
ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை வாய்க்கு வந்தபடி ஏசிப் பேசி வருகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங்.
ஆனால் பிரதமர் பதவியை லோக்பால் சட்டத்தின் கீழ் கொண்டு வர பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட சில மூத்த அமைச்சர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிரதமரே இதற்குத் தயாராக இருந்தும் கூட இவர்களின் பிடிவாதத்தால் குழப்பம் நீடித்து வருகிறது.
இந்த விவகாரத்திற்கு முடிவு கட்டுவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் ஜூலை 3ம் தேதி கூட்டப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 1ம் தேதி மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது. லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குவேன் என்று அன்னா ஹஸாரேவும் கூறியுள்ளார்.
இப்படி இடியாப்பச் சிக்கலாகி வரும் நிலையில் லோக்பால் மசோதா குறித்து விவாதிக்க காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதில் சோனியா தலைமையில் முக்கியத் தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications