தமிழகத்திற்கு 8,000 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயை குறைத்த மத்திய அரசு!
சென்னை: தமிழகத்தில் ரேசன் கடைகள் மூலம் வினியோகிக்க வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெயில் 8,000 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயை மத்திய அரசு குறைத்துள்ளது.
உணவு வழங்கல் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு இன்று காலை திடீரென அடையாறு, அபிராமபுரம் பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் ஆய்வு நடத்தினார்.
அடையாள அட்டை தொங்க விடாமல் இருந்த ஊழியர்களிடம் கண்டிப்பாக அடையாள அட்டை அணிந்துதான் வேலை பார்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார். எடை தராசு, பொருட்கள் இருப்பு, பில் போன்றவற்றை ஆய்வு செய்தார்.
பல கடைகளில் வைக்கப்பட்டிருந்த ஊட்டி தேயிலை மற்றும் பருப்பு உள்ளிட்ட சில பொருட்களின் மீது விற்பனை விலை ஓட்டப்படவில்லை. விற்பனை விலையை ஒட்டித்தான் பொருட்களை விற்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் தற்போது ஒரு 1.85 கோடி ரேசன் கார்டுகள் உள்ளன. கடந்த திமுக ஆட்சியில் போலி ரேசன் கார்டை ஒழிப்பதில் சரியான முறையில் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே 15 லட்சத்திற்கும் மேல் போலி ரேசன் கார்டுகள் உள்ளன. இவற்றைக் களைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்படுவதில் 8,000 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயை குறைத்துவிட்டனர். எனவே புதிய கார்டுதாரர்களுக்கு 3 லிட்டர் வீதம் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. மத்திய தொகுப்பில் இருந்து 65 ஆயிரம் கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க கோரி முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். கூடுதலாக மண்ணெண்ணெய் கிடைத்தவுடன் கார்டுதாரர்களுக்கு கூடுதலாக வழங்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications