முதல்வரின் காரை நிறுத்தி வாழ்த்து சொன்ன ராணி மேரி கல்லூரி மாணவிகள்

முதல்வர் ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டிலிருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, ராணி மேரி கல்லூரி வழியாக தலைமைச் செயலகம் செல்வது வழக்கம். நேற்று பிற்பகல் தனது வீட்டிலிருந்து காரில் புறப்பட்டு தலைமைச் செயலகத்துக்குச் சென்று கொண்டிருந்தார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து சொல்வதற்காக ராணி மேரி கல்லூரி முன்பு முதல்வர், பேராசிரியைகள், மாணவிகள் கூடி நின்றனர். அங்கு திரளாக குழுமியிருந்த மாணவிகளை பார்த்ததும் முதல்வர் ஜெயலலிதா தனது டிரைவரை காரை நிறுத்தச் சொன்னார்.
உடனே டிரைவர் காரை நிறுத்தினார். அப்போது மாணவிகளும் பேராசிரியைகளும் முதல்வர் ஜெயலலிதா அருகே சென்று அவருக்கு மலர்க்கொத்து கொடுத்து, மீண்டும் முதல்வர் ஆனதற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மாணவிகள் மகிழ்ச்சி
அவர்களின் வாழ்த்துக்களை புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்ட முதல்வர் ஜெயலலிதா, கல்லூரி முதல்வர், பேராசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அதோடு மாணவிகள் நன்றாக படித்து வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குச் செல்ல தனது நல் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
முதல்வரின் வாழ்த்து அவர்களை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
ராணி மேரி கல்லூரி... ஒரு ப்ளாஷ்பேக்!
கடந்த முறை, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதுதான், புதிய தலைமைச் செயலகம் கட்ட ராணி மேரி கல்லூரி முழுவதையும் இடிக்கச் சொல்லி 2003-ம் ஆண்டு ஆணையிட்டார். இந்தக் கல்லூரியைக் காக்க மாணவிகளும் ஆசிரியைகளும் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததற்காகவே முன்னாள் துணை முதல்வர் முக ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். பின்னர் உயர்நீதி மன்ற தடை ஆணை காரணமாக அந்த முயற்சியைக் கைவிட்டார் ஜெயலலிதா என்பது நினைவிருக்கலாம்!












Click it and Unblock the Notifications