மத்திய அரசுடன் பேச்சு தோல்வியடைந்தால் காலவரையற்ற ஸ்டிரைக்-லாரி அதிபர்கள் எச்சரிக்கை
நாமக்கல்: டீசல் விலை உயர்வு குறித்து மத்திய அரசுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் ஜூன் 27ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிப்போம் என்று தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் நல்லதம்பி கூறுகையில்,
லாரி உதிரி பாகங்கள், டயர் விலை உயர்வு காரணமாக ஏற்கெனவே லாரி தொழில் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் டீசல் விலையை ரூ.3 அதிகரிப்பதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்த விலை உயர்வு காரணமாக லாரி வாடகையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரும். டீசல் விலையை திடீரென உயர்த்திய மத்திய அரசுக்கு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கண்டனம் தெரிவிக்கிறது.
பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதிக்கும் பல்வேறு விதமான வரிகளால் அவற்றின் விலை அதிகரிக்கிறது. இந்த வரிகளை குறைப்பதால் டீசல் விலை உயர்வை தவிர்க்க முடியும். ஆனால், அத்தகைய நடவடிக்கையில் மத்திய அரசும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் ஈடுபடுவதில்லை.
இப்போது ஒரு லிட்டர் டீசலுக்கு உயர்த்தப்பட்டுள்ள ரூ.3-க்கு தமிழக அரசு சார்பில் மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படும். இதனால் டீசல் விலை மேலும் 66 காசுகள் உயரும். மத்திய அரசு விரி விலக்கு அளிக்காவிட்டாலும், மாநில அரசு மதிப்புக் கூட்டு வரியை குறைக்க வேண்டும்.
டீசல் விலை உயர்வு குறித்து ஜூன் 27ம் தேதி திங்கள்கிழமை டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் நிர்வாகிகளும், மத்திய அரசின் உயரதிகாரிகளும் பங்கேற்பர். இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபடுவர் என்றார் நல்லதம்பி.












Click it and Unblock the Notifications