நில அபகரிப்பு: சேலம் திமுக கவுன்சிலர் கைது
சேலம்: போலி ஆவணங்கள் மூலம் பெண் ஒருவரின் நிலத்தை அபகரித்த சேலம் திமுக கவுன்சிலர் ஆட்டோ மாணிக்த்தை மாவட்ட நில மோசடி பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சேலம் அம்மாபேட்டை சிங்கமெத்தை பகுதியைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். இவரது மனைவி பத்மாவதி(59). அவர் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனனிடம் அளி்தத புகாரில் கூறியிருப்பதாவது,
வீராணம் பிரிவு ரோடு பகுதியில் எனக்கு சொந்தமாக 4 ஆயிரத்து 365 சதுர அடி நிலம் உள்ளது. அதில் 2 ஆயிரத்து 592 சதுர அடி நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் திமுக கவுன்சிலர் ஆட்டோ மாணிக்கம் (எ) ராமசாமி அபகரித்து கட்டிடமும் கட்டியுள்ளார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து எனது நிலத்தை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
புகாரை பெற்றுக் கொண்ட எஸ்.பி. இது குறித்து விசாரணை நடத்த சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசின் நில மோசடி பிரிவிற்கு உத்தரவிட்டார்.
போலீஸ் விசாரணையில் ஆட்டோ மாணிக்கம் பத்மாவதியின் நிலத்தை அபகரித்து கட்டிடம் கட்டியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து திமுக கவுன்சிலர் ஆட்டோ மாணிக்கம் (எ) ராமசாமியை போலீசார் கைது செய்தனர்.
நேற்று தான் நில அபகரிப்பு புகாரில் கோவை திமுக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.