தாம்பரத்தில் பிறந்து 6 நாளேயான ஆண் குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த தாய் கைது
தாம்பரம்: தாம்பரத்தில் பிறந்து 6 நாட்களே ஆன ஆண் குழந்தையை அதன் மனநலம் சரியில்லாத தாய் கொன்று பீப்பாய் அடைத்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தாம்பரத்தை அடுத்த நெடுங்குன்றம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனசேகர். கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி (20). இவர்கள் 2 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த சில மாதங்களாக ரேவதிக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது. அவருக்கு கடந்த 6 நாட்களுக்கு முன் தான் ஆண் குழந்தை பிறந்தது. நேற்றிரவு ரேவதி குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் கணவர், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்கள் 2 பேரும் இருந்துள்ளனர்.
திடீர் என்று 11 மணி அளவில் மாமியார் ராணி எழுந்துள்ளார். ரேவதியைப் பார்த்தபோது பக்கத்தில் குழந்தை இல்லை. உடனே திடுக்கிட்ட அவர் சத்தம் போட்டுள்ளார். தூங்கிக் கொண்டிருந்த அனைவரும் பதறிப்போய் எழுந்து குழந்தையைத் தேடினர். வீட்டினுள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது தண்ணீர் உள்ள பீப்பாயில் குழந்தை பிணமாக மிதந்தது கண்டு அதிர்ந்தனர். உடனே பீர்க்கன் காரணை போலீசில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றினர்.
வீட்டில் இருந்த 6 பேரிடமும் விசாரித்ததில் குழந்தையைக் கொன்றதாக ரேவதி ஒப்புக் கொண்டார். ஆனால் எப்படி கொன்றார் என்று அவருக்கு சொல்லத் தெரியவில்லை. அதற்காக வருந்தவும் இல்லை. இதையடுத்து ரேவதி கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு ரேவதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அதுவும் திடீர் என்று இறந்தது. உடல் நலக்குறைவால் இறந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் அந்த குழந்தையையும் ரேவதி தான் கொன்றிருப்பாரோ என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications