அன்னாவை சந்திக்க நேரம் கொடுக்காமல் இழுத்தடிக்கும் சோனியா

லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு திரட்டி வருகிறார் அன்னா. இதற்காக அரசியல் தலைவர்களை அவர் சந்தித்து வருகிறார். பாஜக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை சந்தித்த அவர் இன்று சோனியா காந்தியை சந்திக்க நேரம் கேட்டிருந்தார்.
இருப்பினும் இதுவரை சோனியா காந்தி தரப்பிலிருந்து அன்னாவுக்கு நேரம் ஒதுக்கவில்லை என்று தெரிகிறது. சோனியா காந்தி மிகவும் பிசியாக இருப்பதாக அன்னா தரப்புக்குக் கூறப்பட்டுள்ளதாம்.
இதனால் அன்னா, சோனியா சந்திப்பு இன்று சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து அன்னா தரப்பில் கூறுகையில், சந்திப்பு இதுவரை ரத்தாகவில்லை. இன்று பிற்பகலுக்கு மேல் ஒரு வேளை சந்திப்பு இடம் பெறலாம். இருப்பினும் எங்களுக்கு இதுவரை சோனியா காந்தி அலுவலகத்திலிருந்து நேரம் ஒதுக்கித் தரப்படவில்லை என்றார்.
அதேசமயம், பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் சிபிஐ தலைவர் ஏ.பி.பர்தான் ஆகியோரை இன்று அன்னா ஹஸாரே சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.
அதேபோல ஜூலை 3ம் தேதி ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் அஜீத் சிங்கையும், பாஜக தலைவர் அத்வானியையும் சந்திக்கவுள்ளார் அன்னா ஹஸாரே.
நிதிஷை சந்தித்தார் அன்னா:
இதற்கிடையே, இன்று காலை பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை, டெல்லியில் வைத்து சந்தித்தார் அன்னா ஹஸாரே. அவருடன் கிரண் பேடி உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.
நிதிஷ்குமாரிடம் வலிமையான லோக்பால் சட்டம் அமைய வேண்டிய அவசியம் குறித்தும், பிரதமரை லோக்பாலில் சேர்ப்பது குறித்தும் வலியுறுத்தி ஆதரவு கோரினார் அன்னா.
அப்போது அன்னாவிடம், உங்களது முயற்சிகளை ஆதரிக்கிறேன். மாநில அளவில் வலிமையான லோக்பால் அமைய வேண்டும் என்று கூறினார் நிதீஷ் குமார். மேலும் தனது கட்சித் தலைவர்களுடன் லோக்பால் மசோதா குறித்து ஆலோசனை நடத்துவதாகவும் அவர் அன்னாவிடம் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் நிதீஷ் குமார் பேசுகையில், லோக்பால் மசோதா குறித்த தனது நிலையை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
நிதீஷ் குமாருடனான சந்திப்பு குறித்து அன்னா ஹஸாரே கூறுகையில், இந்த சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது, வெற்றிகரமாக இருந்தது என்றார்.












Click it and Unblock the Notifications