ஈழத் தமிழர்கள் விவகாரம்: மத்திய அரசை வலியுறுத்த முடியாத மைனாரிட்டி திமுக அரசு- திருமா

நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நெல்லை மாவட்டம் வடக்கு தாழையூத்து பஞ்சாயத்து தலைவி கிருஷ்ணவேணி மீது சமுக விரோத கும்பல் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இது போன்று தலித் பஞ்சாயத்து தலைவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.
பஞ்சாயத்து தலைவி கிருஷ்ணவேணி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தலித் தலைவர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவர்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு அளி்க்க வேண்டும்.
மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் தேவை. அப்போது தான் இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்கும், தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும்.
ஈழத் தமிழர்கள் பிரச்சனை சர்வதேச சிக்கல்கள் நிறைந்தது. இந்த விஷயத்தில் இலங்கைக்கு சீனா, ரஷ்யா, உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக உள்ளது.
எனவே மத்திய அரசு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.
கடந்த காலத்தில் திமுக அரசு சிறுபான்மை அரசாக இருந்ததால் தான் அதனால் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு மத்திய அரசை வலியுறுத்த முடியவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications