நெய்யாறு விவகாரம்: கேரள முதல்வர் உம்மன்சாண்டியை சந்தித்த தமிழக எம்.எல்.ஏ.
கன்னியாகுமரி: நெய்யாறு இடதுகரை சானலில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதரணி கேரள முதல்வர் உம்மன்சாண்டியை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கருப்பையாறு வழியாக நெய்யாறு அணைக்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் செல்கிறது. தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சி காலத்தில் கேரள அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு நெய்யாறு இடதுகரை சானல் அமைக்கப்பட்டது. இந்த சானலில் நீண்ட காலமாக தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இதன் மூலம் கொல்லங்கோடு, வன்னியூர், மருதங்கோடு உட்பட 9 வருவாய் கிராம மக்கள் பயனடைந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் தண்ணீர் திறந்து விடுவதை கேரள அரசு நிறுத்தியது. இதனால் விளவங்கோடு தாலுகாவிற்கு உட்பட்ட பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பெரும்பாலான விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறியது.
இந்த சானலில் தண்ணீர் திறந்து விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்று விஜயதரணி எம்.எல்.ஏ. அன்மையில் தமிழக சட்டசபையில் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் விஜயதரணி கேரள முதல்வர் உம்மன்சாண்டியை நேரில் சந்தித்தார்.
நெய்யாறு சானலில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக ஒப்பந்தம் உள்ளது. மேலும் தண்ணீர் திறந்துவிடுமாறு மத்திய நீராதார தீர்ப்பாயமும் வலியுறுத்தியுள்ளது. முல்லை பெரியாறுடன் இந்த பிரச்னையை சேர்க்கக் கூடாது. நெய்யாறு இடதுகரை சானலில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கேரள முதல்வரும் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் திறந்துவிடுவதாக உறுதியளித்ததாக விஜயதரணி தெரிவித்தார். இவர் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யரின் தீவிர ஆதரவாளர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. கேரள இளைஞர் காங்கிரஸ் தேர்தலின்பது இவரும் அங்கு பணியாற்ற அய்யருடன் அனுப்பப்பட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications