அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் அருகே பறந்த மர்ம விமானத்தால் பரபரப்பு
வாஷிங்டன்: அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் அருகே பறந்த மர்ம விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த விமானத்தை முற்றுகையிட்ட கடற்படைப் பாதுகாப்பு ஹெலிகாப்டர்கள் அந்த விமானத்தை மேரிலான்ட் பகுதிக்குக் கொண்டு சென்றனர்.
தலைநகர் வாஷிங்டன் அருகே உள்ள பகுதி கேம்ப் டேவிட். இது அமெரிக்க அதிபர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், அமைச்ர்கள் உள்ளிட்டோருடன் அவ்வப்போது ஓய்வெடுக்கும் இடமாகும். இந்தப் பகுதி அமெரிக்க கடற்படை மையமாகவும் செயல்படுகிறது. கேம்ப் டேவிட் அமைந்துள்ள வான்வெளிப் பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதி. அப்பகுதியில் ராணுவ விமானங்களைத் தவிர பயணிகள் விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்தப் பகுதி வழியாக ஒரு சிறிய ரக பயணிகள் விமானம் வந்தது. இதைப் பார்த்து உஷார் ஆன அமெரிக்க தேசிய பாதுகாப்பு படையினர், உடனடியாக கடற்படை ஹெலிகாப்டர்களை அங்கு அனுப்பினர். அந்த ஹெலிகாப்டர்கள், அந்த மர்ம விமானத்தை முற்றுகையிட்டு மேரிலான்ட் பகுதிக்கு திரும்பிச் செல்லுமாறு உத்தரவிட்டன. இதையடுத்து அந்த விமானம் மேரிலான்ட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
அந்த விமானம் எதற்காக இப்பகுதியில் அத்துமீறி வந்தது, அதில் இருந்தவர்கள் யார், எங்கிருந்து அது வந்தது, எங்கு போய்க் கொண்டிருந்தது என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
டேவிட் கேம்ப் பகுதியில் நுழைந்த மர்ம விமானத்தால் அமெரிக்கத் தலைநகரில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் நடந்த சமயத்தில் அங்கிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானப்படைத் தள கோல்ப் மைதானத்தில் அதிபர் ஒபாமா, துணை அதிபர் ஜோ பிடன், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் ஜான் போனர் ஆகியோர் கோல்ப் ஆடிக் கொண்டிருந்தனராம்.












Click it and Unblock the Notifications