சென்னையில் பயங்கரம்-பழம் பறிக்க ராணுவக் குடியிருப்புக்குள் நுழைந்த சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர
சென்னை: சென்னையில் பழம் பறிப்பதற்காக ராணுவக் குடியிருப்புக்குள் நுழைந்த 13 வயது சிறுவனை ராணுவ வீரர் ஒருவர் கொடூரமாக சுட்டுக் கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிக் குண்டு சிறுவனின் தலையை துளைத்து பிளந்து விட்டது.
சென்னை தீவுத்திடல் பகுதி இந்திரா நகரைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி கலைவாணி. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 2-வது மகன் தில்ஷன். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் மதிய வேளையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து தீவுத்திடல் அருகே உள்ள ராணுவக் குடியிருப்புக்குள் விழுந்து கிடக்கும் பாதாம் பழங்களை எடுக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த ராணுவக் குடியிருப்புக்குள் கீழே விழுந்து கிடக்கும் பழங்களை அப்பகுதி சிறுவர்கள் அடிக்கடி வந்து எடுப்பது வழக்கம். அந்த சமயத்தில் அவர்களைப் பிடித்து எச்சரித்து ராணுவ பாதுகாப்பு சென்ட்ரி அனுப்பி விடுவார்.
ஆனால் நேற்று சென்ட்ரி சற்று கொடூரமாக நடந்து கொண்டார். சிறுவன் தில்ஷனை நோக்கி சுட்டு விட்டார். தலையில் குண்டு பாய்ந்து தில்ஷன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் விழுந்தான்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற சிறுவர்கள் அங்கிருந்து ஓடி தில்ஷனின் பெற்றோரிடம் நடந்ததைக் கூறினர். அதிர்ச்சி அடைந்த பெற்றோரும், அப்பகுதி மக்களும் ராணுவக் குடியிருப்பில் திரண்டு விட்டனர். ஆனால் தில்ஷனைக் காணவில்லை. இதுகுறித்துக் கேட்டபோது சிறுவனை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக ராணுவத்தினர் கூறியுள்ளனர்.
இதை நம்ப மறுத்த பொதுமக்கள் அங்கேயே சாலை மறியலில் குதித்தனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பெரும் பதட்டம் ஏற்பட்டது.
சிலர் அரசு பொது மருத்துவ்மனைக்குச் சென்று பார்த்தபோது உள்ளே நுழைய விடாமல் தடுக்கப்பட்டனர். இதனால் அவர்கள் பொது மருத்துவமனைக்கு எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அவர்களைக் கலைந்து போகுமாறு போலீஸார் வலியுறுத்தியபோது ஏற்கனவே கடும் ஆத்திரத்தில் இருந்தவர்கள் போலீஸாரை நோக்கி தாக்குதலில் குதித்தனர். கல்வீசி அவர்கள் தாக்கியதில் ஒரு போலீஸ்காரரின் தலையில் காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் இறந்து விட்டதாக தகவல் வெளியாகவே பதட்டம் மேலும் அதிகரித்தது.
தகவல் அறிந்ததும் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், உதயக்குமார் ஆகியோர் சிறுவனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
சம்பவம் குறித்து வடக்கு மண்டல இணை ஆணையாளர் செந்தாமரைக் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிறுவனை துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications