ரூ.1.25 கோடி மோசடி, கொலை மிரட்டல் புகார்: சன் பிக்சர்ஸ் சிஓஓ சக்சேனா திடீர் கைது!

சேலத்தைச் சேர்ந்தவர் டி.எஸ்.செல்வராஜ். சினிமா பட வினியோகஸ்தரான இவர் கந்தன் பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இவர் சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், "நான் சினிமா வினியோகஸ்தர் தொழில் செய்கிறேன். "சன்பிக்சர்ஸ்'' பட நிறுவனத்தினர் தயாரித்து வெளியிட்டுள்ள "தீராத விளையாட்டுப்பிள்ளை'' படத்தின் சேலம் பகுதி வினியோக உரிமையை வாங்கும்படி, சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா என்னை வற்புறுத்தினார். அதன்பேரில், ரூ.1.25 கோடி கடன் வாங்கி கொடுத்து அந்த படத்தின் வினியோக உரிமையை வாங்கினேன்.
ஆனால் அந்த படத்தை சக்சேனாவே சேலம் பகுதியில் வெளியிட்டுவிட்டார். நான் கொடுத்த ரூ.1.25 கோடி பணத்தையும் திருப்பி தரவில்லை. அந்த படத்திற்கு வசூலான 83 லட்சத்து 53 ஆயிரத்து 374 ரூபாயை தரும்படி கேட்டேன். ஆனால் சக்சேனா தராமல் இழுத்தடித்தார்.
கடந்த ஜனவரி மாதம் அதுபற்றி கேட்டபோது என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து பணத்தை வசூலித்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.
இந்த புகார் மனு மீது சென்னை கே.கே.நகர் போலீசார் கடந்த 1-ந் தேதி அன்று கொலை மிரட்டல் மற்றும் மோசடி உள்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்தார்கள்.
சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா மீது வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. சக்சேனா நேற்று இரவு 7 மணி அளவில் ஐதராபாத்தில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் வைத்து அவரை கே.கே.நகர் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவரை அசோக் நகர் உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுவார் என்று போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
மோசடி மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சக்சேனா மீது ஏற்கெனவே சில புகார்கள் உள்ளதாகவும், அவையும் இந்த வழக்குடன் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது.
ஹோட்டலில் புகுந்து தாக்கிய சக்ஸேனா ஆட்கள்
ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் செக்கர்ஸ் ஹோட்டலில் புகுந்து ஒரு பெரும் கும்பல் தாக்கி பெரும் ரகளை செய்தது நினைவிருக்கலாம். திமுகஆட்சியின்போது இந்த சம்பவம் நடந்தது. அந்த தாக்குதலைத் தூண்டி விட்டவரே சக்ஸேனாதான் என்பது குற்றச்சாட்டு. ஆனால் போலீஸார் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர்.
சித்தார்த் என்பவர் சக்ஸேனா மீது குண்டர்களை வைத்து தன்னை மிரட்டுவதாக போலீஸில் புகார் கொடுத்திருந்தார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில்தான் சித்தார்த் செக்கர்ஸ் ஹோட்டலில் இருப்பதை அறிந்து அங்கு தனது ஆட்களை சக்ஸேனா அனுப்பி வைத்து பெரும் ரகளையில் ஈடுபட்டதாக அப்போது கூறப்பட்டது.












Click it and Unblock the Notifications