திருச்சியில் கல்லூரி மாணவியை கடத்திய இன்ஸ்பெக்டர் கண்ணன் கைது
திருச்சி: திருச்சியில் கல்லூரி மாணவியைக் கடத்திய இன்ஸ்பெக்டர் கண்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்தவர் மல்லிகா (19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி படித்து வந்தார்.
இவர், கரூரைச் சேர்ந்த சக மாணவியின் அண்ணன் ஜெயகாந்தன் என்பவரை காதலித்துள்ளார்.
கடந்த 25-ம் தேதி கல்லூரி விடுமுறை என்பதால் ஊருக்குச் செல்வதற்காக மல்லிகா திருச்சி பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அவரை பேருந்தில் ஏற்றிவிட ஜெயகாந்தனும் சென்றுள்ளார்.
இரவு நேரமாகிவிட்டதால் ஏதாவது ஒரு லாட்ஜில் தங்கிவிட்டு மறுநாள் காலை ஊருக்குப் போக முடிவெடுத்தனர். ஆனால் அவர்களுக்கு எந்த லாட்ஜிலும் அறை கிடைக்கவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் சாலை ஓரத்தில் வெகு நேரமாக நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த திருச்சி மாவட்ட தீண்டாமை ஒழிப்பு இன்ஸ்பெக்டர் கண்ணன் அவர்களை மிரட்டியுள்ளார். மேலும், ஜெயகாந்தனை விரட்டிவிட்டு மல்லிகாவை காரில் கடத்திக் கொண்டு சென்றுள்ளார்.
இது குறித்து ஜெயகாந்தன் கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் திருச்சி மாவட்ட தீண்டாமை ஒழிப்பு இன்ஸ்பெக்டர் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து அனைத்து காவல் நிலையத்திற்கும், செக்போஸ்ட்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து தன்னை போலீசார் தேடுவதை அறிந்த இன்ஸ்பெக்டர் கண்ணன், மல்லிகாவை புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றார்.
புதுக்கோட்டையில் மல்லிகாவை மீட்ட போலீசார் அவரை திருச்சிக்கு அழைத்து வந்தனர். பின்பு மல்லிகாவை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
புதுக்கோட்டையில் பதுங்கி இருந்த இன்ஸ்பெக்டர் கண்ணனை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications