பத்மநாபசாமி கோவில் நகைகள் கணக்கெடுப்பை வீடியோல் படமாக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் உள்ள பாதாள ரகசிய அறைகளைத் திறந்து ஆய்வு நடத்த வேண்டும் என்று கோரி சுந்தரராஜன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை ஏற்றுத்தான் ஆய்வுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தற்போது ஆய்வு நடந்து வருகிறது.
இந்த நிலையில் சுந்தரராஜன் இன்னொரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் நகைகள் உள்ளிட்ட அரிய பொருட்களின் கணக்கெடுப்பை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். அவற்றைப் பாதுகாப்பாக வைப்பது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் சுந்தரராஜனின் கோரிக்கையை ஏற்றது. இதுகுறித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தற்போது நடந்து வரும் நகைகள் உள்ளிட்ட பொருட்கள் குறித்த ஆய்வுப் பணிகளை, நகைகள் கணக்கெடுப்பை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் இந்த நகைகளின் உண்மையான மதிப்பு உள்ளிட்டவற்றை கண்டுபிடிப்பதற்காக தொல்பொருள் வல்லுநர் குழுவை அமைக்கலாம் என்று யோசிக்கிறோம். எனவே இதுதொடர்பாக தொல்பொருள்துறை அதிகாரிகளின் பெயரை மத்திய அரசு பரிந்துரைக்க வேண்டும்.
மேலும் இந்த நகைகளை திருவனந்தபுரம் அரசு அருங்காட்சியகத்தில் வைக்கும் திட்டம் உள்ளது, பாதுகாப்பு குறித்த திட்டம் உள்ளதா என்பது குறித்தும் மத்திய அரசு வருகிற வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு அன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.












Click it and Unblock the Notifications