பத்மநாப சுவாமி கோவிலுக்கு நிரந்தர பாதுகாப்பு: உம்மன் சாண்டி பேட்டி

கேரளாவில் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள ரகசிய அறைகள் உச்சநீதிமன்ற உத்தரவுபடி திறக்கப்பட்டன. அவற்றில் உள்ள தங்க, வைர, வைடூரிய நகைகள் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த புதையல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை மற்றும் கோவில் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கை குறித்து கேரள அமைச்சரவை நேற்று கூடி விவாதித்தது.
கூட்டத்திற்கு பின்னர் முதல்வர் உம்மன் சாண்டி கூறியதாவது,
பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள விலை மதிக்க முடியாத நகைகள், ஆபரணங்கள் அந்த கோவிலிலேயே பராமரிக்கப்பட வேண்டும் என பெரும்பான்மையான மக்கள் விரும்புகின்றனர். அதுவே அரசின் விருப்பம். எனினும் இதுபற்றி உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும்.
கோவிலுக்கு தற்போது கமாண்டோ பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு நிரந்தரமாக பலத்த பாதுகாப்பு அளிக்க அரசு முடிவெடுத்துள்ளது. பக்தர்களுக்கு எவ்வித தொந்தரவும இல்லாத வகையில் கோவில் பகுதியில் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பு அளிக்கப்படும். இதற்காக சிறப்பு பாதுகாப்பு திட்டம் தயாரிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications