உ.பியில் பஸ் மீது ரயில் மோதி பயங்கர விபத்து- 30 பேர் பலி
கான்ஷிராம் நகர் (உ.பி.): உ.பி. மாநிலம் கான்ஷிராம் நகர் மாவட்டத்தில் திருமண கோஷ்டியினரை ஏற்றி வந்த பேருந்தும், வேகமாக வந்த ரயிலும் மோதிக் கொண்டதில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இன்று அதிகாலையில் இந்த கோரச் சம்பவம் நடந்தது.
சப்ரா மதுரா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலையில், வந்து கொண்டிருந்தது. அப்போது ஈடா அருகே ஒரு ஆளில்லாத ரயில்வே கிராசிங்கை ரயில் கடக்க முயன்றது. அப்போது ஒரு பேருந்து திடீரென குறுக்கே வந்து விட்டது.இதில் பேருந்து சிக்கி தாறுமாறாக சிதறிப் போனது. அதில் இருந்த பலரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தக் கோர விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 நிதியும் வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications