சிறுவன் தில்ஷனைக் கொன்ற குற்றவாளியை நெருங்கியது சிபிசிஐடி போலீஸ்- கைது செய்யக் காத்திருக்கிறது
சென்னை: 13 வயது சிறுவன் தில்ஷன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய சந்தேக நபரை கிட்டத்தட்ட நெருங்கி விட்டது சிபிசிஐடி போலீஸ். அவரைக் கைது செய்ய வேண்டியது மட்டுமே தற்போது பாக்கி உள்ளது. அதற்கான அனுமதிக்காகவும், தடைகள் நீக்கப்படுவதற்காகவும் காத்திருக்கிறது சிபிசிஐடி போலீஸ்.
தில்ஷன் அநியாயமாக கொல்லப்பட்டு 6 நாட்களாகி விட்டது. ஆனால் இதுவரை அந்தக் கொலையாளியை கைது செய்ய முடியாத நிலையில் தமிழக காவல்துறை உள்ளது. காரணம, ராணுவத்தினர் அதற்கு நடுவே முட்டுக்கட்டையாக இருப்பதுதான்.
தீவுத் திடல் ராணுவக் குடியிருப்புக்குள் நுழைந்த சிறுவன் தில்ஷனை, ராணுவ அதிகாரி ஒருவர் தனது துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் நாட்டையே பரபரப்பில் ஆழ்த்தியது. இந்த சம்பவத்திற்குக் காரணமானவர் யார் என்பதை கிட்டத்தட்ட சிபிசிஐடி போலீஸார் கண்டுபிடித்து விட்டனர். அவர் ஹரியானாவைச் சேர்ந்த சீக்கிய அதிகாரி. லெப்டினென்ட் கர்னலாக அவர் இருக்கிறார். அவரைக் கைது செய்வதற்கான அனைத்து ஆதாரங்களையும் சிபிசிஐடி போலீஸார் திரட்டி விட்டனர். ஆனால் கைது செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
காரணம், ராணுவத்திலிருந்து கொடுக்கப்பட்டு வரும் முட்டுக்கட்டைகள் என்று கூறப்படுகிறது. ராணுவத் தரப்பில் முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டு வருவதாக சிபிசிஐடி போலீஸ் தரப்பில் கூறினாலும் கூட கொலையைச் செய்த நபரை கிட்டத்தட்ட நெருங்கியும் கூட அவரைக் கைது செய்ய முடியாமல் இழுபறியாக உள்ளதாம். இருப்பினும் விரைவில் இந்த வழக்கில் திருப்பம் ஏற்படலாம் என்றும், தவறு செய்தவர் தப்பிக்க முடியாத அளவுக்கு ஆதராங்களை திரட்டி வருவதாகவும் போலீஸ் தரப்பில் உறுதியுடன் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications